மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை பற்றிய விவாதங்களைத் தான் அதிகம் காண முடிகிறது. நிறைய பேர் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அருள்மொழி வர்மனை அருண்மொழி வர்மன் எனவும், ஆதித்த கரிகாலனை ஆதித்ய கரிகாலன் எனவும் குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொன்னியின் செல்வனை படித்தவர்கள் தங்கள் மனதில் கற்பனை செய்துவைத்த கதாப்பாத்திரங்களின் தோற்றங்களுக்கும், படத்தில் நடிகர்களின் தோற்றங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாக கருத்துதெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிக்க | ஷாருக் கான் படத்தில் விஜய்!
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கமல் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
படத்தின் துவக்கத்தில் கமல் தனது குரல் மூலம் இந்தப் படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளாராம். இந்தத் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத் தேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.
மேலும் ஆழ்வார்க்கடியான நம்பியாக ஜெயராம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், மதுராந்தகனாக விக்ரம் பிரபு, பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் ரவிதாசனாக கிஷோரும் நடித்துள்ளனர்.