ஐந்து வருடங்களுக்குப் பிறகு பாவனா நடிக்கும் மலையாளப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். 2017-ல் கடைசியாக ஏடம் ஜுவான் என்கிற மலையாளப் படத்தில் நடித்தார். இதன்பிறகு சமீபகாலமாக கன்னடப் படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாவனா மலையாளப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என மலையாள ரசிகர்களும் திரையுலகினரும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து 5 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் பாவனா.
Ntikkakkakkoru Premondarnn என்கிற மலையாளப் படத்தில் பாவனா நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாவனா, ஷரஃபுதீன் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் அதில் அஷ்ரஃப் இயக்குகிறார். இசை - பால் மேத்யூஸ். இப்படத்தின் போஸ்டரைப் பிரபல நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ளார்.