கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான வரிகள் இடம்பெற்றுள்ளன.
அனிருத் இசையில் இன்று மாலை வெளியான முதல் பாடலில் ’ஒன்றிய அரசின் தப்பாலே, ஒன்னுமில்ல இப்பாலே...' போன்ற வரி பிரதமர் நரேந்திர மோடி அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதனிடையே படத்தின் முதல் பாடல் இன்று (மே 11) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 40 நிமிடங்கள் தாமதமாகவே வெளியானது. அனிருத் இசையில், கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதி பாடியுள்ளார்.
சென்னைத் தமிழில் தொடங்கும் பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான வரிகள் இடம்பெற்றுள்ளன. ’ஒன்றிய அரசின் தப்பாலே, ஒன்னுமில்ல இப்பாலே...' எனும் வரி நேரடியாக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதேபோன்று இதற்கு அடுத்த வரியாக ’சாவி இப்போ திருடன் கையிலே’ எனும் வரியும் வருவதால், மோடி அரசை விமர்சிக்கும் வகையில் பாடல் உள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
'ஏரி, குளம், நதிய கூட பிளாட்டு போட்டு வித்தாக்கா, நாரிபூடும் ஊரு ஜனம் சின்ன மழ வந்தாக்கா' எனும் வரிகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகளை அகற்றும் மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் திரைப்படம். ஜுன் 3 அன்று திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் அனைத்து பாடல்களும் வருகிற மே 15 அன்று வெளியாகவுள்ளன.