‘பத்தல பத்தல’ பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும்படியான வரிகள் இடம்பெற்றுள்ளதாக கமல்ஹாசன் மீது காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜுன் 3 அன்று திரையரங்கில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும் அனைத்து பாடல்களும் வருகிற மே 15 அன்று வெளியாகவுள்ளன.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் வெளியானதிலிருந்து இதுவரை யூடியூபில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இப்பாடலில் “ ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே” என்கிற வரி மத்திய அரசை விமர்சிக்கும்படியாக இருப்பதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை.