தரக்குறைவான தன் முகநூல் பதிவுகள் குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தி வருகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அவரின் பாடல்களும் பின்னணி இசையும் லவ் டுடே வெற்றிக்கு பலமாக அமைந்தன.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் முகநூல் பக்கத்தை ஆராய்ந்த ரசிகர் ஒருவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரதீப் இசையமைப்பாளர் யுவனைக் குறிப்பிட்டு ‘யுவன் ஒரு தண்டம், ஃப்ராடு’ என திட்டி பதிவிட்டதை பகிர்ந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்தனர்.
இதையும் படிக்க: ”இதையும் கொஞ்சம் பாருங்க..” வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் பதிவுகள்
இதற்கு பதிலளித்த பிரதீப் “என் முகநூல் பக்கத்திலிருந்து பகிரப்பட்ட சில பதிவுகள் உண்மைதான். ஆனால், தகாத வார்த்தையில் நான் யாரையும் பேசவில்லை. அதெல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. சில வார்த்தைகளால் முகநூல் பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டேன். இதை சிலர் செய்ததற்காக அவர்கள் மீது கோவப்படவில்லை. எத்தனை பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் எனக் காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். வளரும் காலகட்டத்தில் தவறு செய்திருக்கிறேன். இப்போது ஒவ்வொரு நாளும் என்னை சிறந்த மனிதனாக மாற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.