பிரபல ஹிந்தி நடிகருடன் இணைந்து நடித்த படம் கைவிடப்பட்டபோது கதறி அழுத்தாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
தற்போது புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் ‘வதந்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இணையத்தொடராக அமேசானில் வெளிவர உள்ளது. இது புஷ்கர் காயத்ரி தயாரிப்பின் 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது முதல் தயாரிப்பில் வெளியான சுழல் நல்ல வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து இந்த தொடர் மீதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த இணையத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் டிசம்பர் 2ஆம் தேதி அமேசானில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த உயர்ந்த மனிதன் படம் கைவிடப்பட்டபோது தான் கதறி அழுததாகவும் இந்திய அளவில் கிடைத்த வாய்ப்பு பறிபோனது வருத்தமாக இருந்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.