ஆதிபுருஷ் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை தங்களுடைய நிறுவனம் மேற்கொள்ளவில்லை எனப் பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் சொந்த நிறுவனமான என்ஒய் விஎஃப்எக்ஸ் வாலா விளக்கம் அளித்துள்ளது.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ். 2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. ஆதிபுருஷ், 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். இந்நிலையில் ஆதிபுருஷ் பட கிராபிக்ஸ் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது பிரபல நிறுவனமான என்ஒய் விஎஃப்எக்ஸ் வாலா. ஆதிபுருஷ் படத்தின் சி.ஜி./ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளில் நாங்கள் மேற்கொள்ளவில்லை என என்ஒய் விஎஃப்எக்ஸ் வாலா கூறியுள்ளது. ஊடகத்தைச் சேர்ந்த சிலர் சில இதுகுறித்து கேட்டதால் விளக்கம் அளிக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகவலைப் பாலிவுட் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆதிபுருஷ் படத்தின் டீசரில் படத் தயாரிப்பாளர்களில் ஒருவர், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் என பிரசாத் சுதர் பெயர் இடம்பெற்றுள்ளது. பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனமான என்ஒய் விஎஃப்எக்ஸ் வாலா-வின் இணை நிறுவனராகவும் அவர் உள்ளார். இதனால் கேள்வி எழுந்ததையொட்டி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் பிரபல நடிகர் அஜய் தேவ்கன். அந்த நிறுவனத்தின் நிறுவனர், சேர்மனாக அவர் உள்ளார்.