தமிழின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷாவின் சம்பள உயர்வு குறித்த தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தமிழில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திரிஷா. அந்த படத்திற்கு முன்பு சிம்ரனுடன் ஜோடி படத்தின் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடித்த மெளனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, கில்லி என வெற்றிப்படங்களாவே அமைந்தன.
இதனால் ரசிகர்கள் கூட்டம் திரிஷாவிற்கு அதிகரிக்க ஆரமித்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், என பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். எனினும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் நடித்து வந்த படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரைத்துறையில் நடிகையாக கோலோச்சி வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். இதில் அவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் பெரும்பாலானோரைக் கவர்ந்துள்ளது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் நடிகை திரிஷா வேகமாக ஒப்பந்தமாகி வருகிறார். இதனால் தனது ஊதியத்தையும் திரிஷா உயர்த்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பொன்னியின் செல்வனுக்கு முன்பு ரூ.1.5 கோடி ஊதியம் பெற்று வந்த திரிஷா, தற்போது புதிதாக ஒப்பந்தமாகும் படங்களுக்கு ரூ.3 கோடி வரை கேட்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவைப் போன்று திரிஷாவும் இரண்டாம் இன்னிங்ஸை அடித்து ஆட ஆரமித்துள்ளார்.