திரையிசைப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 78.
வேலூரில் இசைக் குடும்பத்தில், துரைசாமி ஐயங்கார் - பத்மாவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கலைவாணி. 1971ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில்தான் வாணி ஜெயராம் முதன் முதலில் அறிமுகமானார்.
இதையும் படிக்க.. பாடகி வாணி ஜெயராம் - புகைப்படங்கள்
அன்று முதல் பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் அவரது குரல் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வரும் நிலையில், இன்று அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, வாணி ஜெயராமுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விருதைப் பெறுவதற்கு முன்பாகவே அவர் மறைந்தது, அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் மறைந்தாலும், அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் மூலம் அவர் என்றென்றும் வாழ்வார் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
அவரது குரலில் ஒலித்த தேன்தமிழ்ப் பாடல்களின் பட்டியலில்...
மல்லிகை என் மன்னன் மயங்கும்...
ஏழு சுவரங்களுக்குள்..
கேள்வியின் நாயகனே..
என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம்..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது..
கவிதை கேளுங்கள் கருவில்... என மிகச் சிறந்த திரையிசைப் பாடல்கள் வாணி ஜெயராம் குரலில் ஒலித்தவை.
இவர் திரையிசை மட்டுமின்றி, கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்கள் என அனைத்துப் பாடல்களையும் பாடுவதில் வல்லவராக விளங்கினார்.
இதையும் படிக்க.. பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காளி என பல மொழிகளிலும் இவர் பாடல்களைப் பாடியவர்.
சிறந்த பின்ணிப் பாடகிக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றவர். தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் பெற்றவர்.
சின்ன சின்ன ஆசைகள் படத்தில் இடம்பெற்ற ''மேகமே... மேகமே...'' , வைதேகி காத்திருந்தாள் படத்தில் ''இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..'' போன்ற பாடல்கள் அன்றைய நாள்களில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பாடல்களில் ஒன்றாக இருந்தவை.
தீர்க்க சுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுத, எம்.எஸ். விசுவநாதன் இசையில் ''மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்..'' பாடலை பாடினார். இதுதான் அவரது முதல் தமிழ்த் திரையிசை பாடல்.