தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் தனித்தனியாக பகிர்ந்திருந்த புகைப்படம் மூலம் இந்த ரகசியக் காதல் அம்பலமாகியிருக்கிறது.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் அவ்வப்போது கசிந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், தாங்கள் நண்பர்களாக பழகுவதாகவே இருவரும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க.. கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுகிறேன்: காயத்ரி ரகுராம்
இருவரும் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஜோடியாக நடத்திருந்தனர். இந்தப் படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. இந்த நிலையில்தான் இருவரும் ரகசியமாகக் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
அண்மையில், பிரபல நடிகையும் ஒரு நேர்காணலில், இவர்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் தகவலை வெளிப்படுத்தினார். ஆனால், இதற்கும் காதலர்கள் இருவரும் எந்த பதிலும் சொல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தனர்.
இருவரும் கடந்த ஆண்டு வெளிநாடு சென்று தங்களது காதலை வளர்த்து வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் நீச்சல் குளத்தில் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரவர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். ஆனால் அவர்களை விட, அவர்களது ரசிகர்கள் புத்திசாலிகள் என்று அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.
இருவரின் புகைப்படங்களையும் எடுத்து, இரண்டு புகைப்படங்களும் ஒரே நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டவை என்பதை ஆதாரத்துடன் புகைப்படங்களை இணைத்து, நட்சத்திர காதல் ஜோடிகளின் ரகசியக் காதலை அம்பலப்படுத்திவிட்டனர்.
தங்களது காதலை ஏதோ ஒரு காரணத்துக்காக ரகசியமாக வைத்திருக்கும் இருவருக்கும் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டாலும், வழக்கம் போல இருவரும் மௌனமாகவே இருந்துவிடப் போகிறார்களா? இல்லை புத்தாண்டில் மௌனம் கலைப்பார்களா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.