எதிர்நீச்சல் தொடரை இயக்கிய திருச்செல்வத்தை பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால், எதிர்நீச்சல் தொடருக்கு முன்பே அவர் இயக்கிய தொடர்கள் திருச்செல்வத்துக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்துள்ளன.
இயக்குநர் திருச்செல்வம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். மெட்டி ஒலி தொடரை இயக்கிய திருமுருகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.
அதே தொடரில் மாப்பிள்ளை பாத்திரத்திலும் நடித்தார். அந்த பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு தனியாக தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி கோலங்கள் தொடர் மூலம் இயக்குநரானார். கோலங்கள் தொடர் 6 ஆண்டுகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அதனைத் தொடர்ந்து மாதவி, அல்லி ராஜியம், பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசிக் குடும்பம், வல்லமை தாராயோ ஆகிய தொடர்களை இயக்கினார். தற்போது எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார்.
இதில் கோலங்கள் தொடருக்காக சிறந்த சாதனையாளர் என்ற பிரிவில் தமிழக அரசின் சின்னத்திரை விருதை பெற்றார்.
சிறந்த நெடுந்தொடர் பிரிவில் கோலங்கள் தொடர் தமிழக அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதையும் வென்றது.
கோலங்களுக்காக சிறந்த சின்னத்திரை திரைக்கதை விருது கிடைத்தது.
சன் குடும்ப விருதுகள்: கோலங்கள் தொடருக்காக சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குநர் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன.
மாதவி தொடருக்காக சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், என மூன்று பிரிவுகளில் திருச்செல்வத்துக்கு மைலாபூர் அகாடமி விருது வழங்கப்பட்டன.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் சிறந்த இயக்குநர், சிறந்த வசனம், சிறந்த நகைச்சுவை உள்ளிட்ட 6 பிரிவுகளில் சன் குடும்ப விருதுகளை வென்றது.