பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர், 5 மொழிகளில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஒரு தொடர் ஒரே காலகட்டத்தில் 5 மொழிகளில் எடுக்கப்பட்டு
ஒளிபரப்பப்படுவது இதுவே முதல்முறை.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இல்லத்தரசிகளை மட்டுமில்லாமல், இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள் - பெண்களையும் எதிர்நீச்சல் தொடர் கவர்ந்துள்ளது.
டிஆர்பி பட்டியலில் கடந்த இரு வாரங்களாக, கயல் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். இத்தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். இவர் கோலங்கள் தொடரை இயக்கியவர். ஸ்ரீ வித்யா வசனம் எழுதுகிறார்.
புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள்கள் மூலம், பாரம்பரியம் என்ற பெயரில் குடும்பங்கள் பின்பற்றும் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் தொடராக எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனால், அதிக வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடர் தற்போது 5 மொழிகளில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எதிர்நீச்சல் தொடர் தமிழில் 2022 பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது தெலுங்கு (உப்பென்னா), மலையாளம் (கனல் பூவு), கன்னடம் (ஜனனி), பெங்காலி (அலோர் தீக்கனா), மராத்தி (சபாஷ் சன்பை) மொழிகளில் எதிர்நீச்சல் கதையைத் தழுவி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தொடர்கள் சன் குழுமத்தைச் சேர்ந்த பிறமொழி
சேனல்களில் ஒளிபரப்பாகின்றன.