சின்னத்திரையில் யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்த நடிகை நட்சத்திரா, பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
சின்னத்திரை நடிகர்களும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சமூகவலைதளங்களில் ரசிகர்களைப் பெற்றுள்ளனர். சின்னத்திரையில் தொடர்கள் மூலம் நாள்தோறும் இல்லங்களுக்கு வருவதால், தொடர்களில் நடிப்பவர்கள் பெரும்பாலானோர் க்கள் மனங்களை வென்றவர்களாகவே உள்ளனர்.
தொடர்களில் நடிக்கும் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை தெரிந்துகொண்டு, அவ்வபோது நடக்கும் சுபநிகழ்வுகளுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கின்றனர்.
அந்தவகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரின் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை நட்சத்திரா.
யாரடி நீ மோகினி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாகவும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவராகவும் நடித்திருப்பார்.
யாரடி நீ மோகினி தொடர் சின்னத்திரை வரலாற்றியேலே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட தொடர்களில் ஒன்று. இந்தத் தொடருக்கு அடுத்தபடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் தொடரில் நட்சத்திரா நடித்தார்.
சமீபகாலமாக கருவுற்றிருந்த புகைப்படங்களை நட்சத்திரா பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துவந்தார். அந்தவகையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதையும் ரசிகர்களுக்கு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது கையையும் கணவர் கையையும் குழந்தை பற்றியவாறு இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்றில் உதைத்துக்கொண்டிருந்தவரை இறுதியில் பார்த்துவிட்ட தருணம். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.