சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.
சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
அதனைத் தொடர்ந்து, அவர் மீண்டும் இயக்குநராக புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதை உறுதிசெய்யும் விதமாக சமீபத்தில் சசிகுமார் தன் முகநூல் பக்கத்தில், “சுப்ரமணியபுரம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுவரை என்னை அரவணைத்திருக்கும் அனைவருக்கும் நன்றியும் அன்பும். இத்தனை வருட காலத்திற்குப் பிறகு இப்பொழுது ‘குருதித் துயர் படிந்த வரலாற்றை’ இயக்கப் போகிறேன்.உங்கள் வாழ்த்துகள் வேண்டி.. அன்புடன் சசிகுமார்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க: ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கும் ஜீவா!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகுமார், “எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலைத்தான் நான் அடுத்ததாக இயக்கப்போகிறேன். இணையத்தொடராக உருவாகும் இதன் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நாவலை இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா ஆகியோர் இயக்க திட்டமிட்டிருந்ததும் பின் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.