தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்களைக் கவர்ந்த தொடர், தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது.
ஒருசில தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில், ஒருசில தொடர்கள் காப்புரிமை பெற்று புதிதாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்படுகின்றன.
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான நுவ்வு நேனு பிரேமா என்ற தொடர் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் சுவாமிநாதன் ஆனந்தராமன் மற்றும் பவித்ரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.
இந்தத் தொடர் தற்போது தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. இதிலும் சுவாமிநாதன் ஆனந்தராமன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், தமிழில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர்.
இவருக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.