'தமிழா தமிழா' நிகழ்ச்சியிலிருந்து கரு. பழனியப்பன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக ஜி தமிழ் சேனலில் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், இயக்குநருமான கரு. பழனியப்பன் அந்நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவர் 2003-ல் ஸ்ரீகாந்த் - சினேகா நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். இந்த திரைப்படத்திற்கு மாநில அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.
விஷால் நடித்த இவரது இரண்டாவது படம் சிவப்பதிகாரம். இதனையடுத்து பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரைவைப் பெற்றார். இவரது அடுத்த படமான மந்திர புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து கரு. பழனியப்பன் சில படங்களில் இயக்கியும், நடித்தும் வந்தார். தொடர்ந்து, ஜி தமிழ் சேனலில் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில், 'தமிழா தமிழா' நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கரு. பழனியப்பன் சமூக ஊடகங்களில் இதுகுறித்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஜி தமிழ் உடனான நான்கு வருட 'தமிழா தமிழா' பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.! சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! ..... நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.