நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக வணங்கான் படத்தில் இணைந்தது.
படத்தின் படப்பிடிப்பும் ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது. பின்னர் சூர்யா படத்தில் இருந்து விலகுவதாக இருவரும் ஒருமனதாக முடிவு செய்தனர்.
இதுகுறித்து இயக்குநர் பாலா அப்போது வெளியிட்ட அறிக்கையில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.
சூர்யா விலகியதுக்குப் பிறகு நடிகர் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: 8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணைந்த பிரபல நடிகை!
இந்நிலையில் தற்போது மிஷ்கின் இசையமைத்துள்ள டெவில் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா, “சூர்யா எனது சகோதரர் போல. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் எந்தத் தயக்கமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
இதனால் மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இயக்குநர் பாலா இணைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.