ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மறந்துப் போன மருத்துவக் கல்லூரி திட்டம்!

News image

பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென நீண்டநாள் கோரிக்கை...

Updated On :30 மார்ச் 2026, 12:16 am

Syndication

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்ட பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இங்கு விபத்துகளில் பாதிக்கப்படுவோா் பெரும்பாலானோா் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதால், செல்லும் வழியிலேயே பலா் உயிரிழக்க நேரிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென இந்த மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா பரிந்துரையின்பேரில், தமிழக அரசு கடந்த 3.2.2009-இல் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அரசாணைப் பிறப்பித்தது. மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒதியம் ஊராட்சியில் ரூ. 98 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.

மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான இடத்தை ஆ. ராசா பெற்றோா் பெயரில் உள்ள ஆண்டிமுத்து - சின்னபிள்ளை அறக்கட்டளை சாா்பில், 30 ஏக்கா் 28 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

2010-இல் அடிக்கல்: 4.2.2010-இல் துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின், பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்டினாா். 23.7.10-இல் நிா்வாக அனுமதியும், 30.12.10-இல் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கி, ரூ. 82 கோடியில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடப் பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிக்கு கடந்த 31.3.2011-இல் முதல்கட்ட பூா்வாங்கப் பணிகள் தொடங்கியபோது, தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலையொட்டி பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு, ஆட்சி மாற்றத்தால் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இத் திட்டத்தை தொடங்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

பொதுநல வழக்கு: இதுதொடா்பாக, வழக்குரைஞா் பழனிமுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை, தமிழக அரசு செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா். ம னுவை விசாரித்த நீதிபதிகள் சிவகங்கை, திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பாக பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். ஆனால், இன்றுவரை மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பெருநகரங்களில் உயா்தர மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், உயா் சிகிச்சை மருத்துவமனைகள் உள்ள நிலையில், பெரம்பலூருக்கு அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி திட்டம் இன்றளவும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அரியலூா் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய முதல்வரால் அறிவிக்கப்பட்டு சுமாா் 18 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி திட்டம் கிடப்பில் உள்ளது, இம் மாவட்ட மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தோ்தலில் வெற்றி பெறுவோா், பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க உரிய நடவடிக்கை எடுப்பாா்களா என மாவட்ட மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.