பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வெற்றி திரைப்படங்களில் ஒன்றான டைகர் படத் தொடராக அதன் மூன்றாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கானுடன் கார்த்ரீனா கைப், எம்ரான் ஹாஸ்மி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, மகாராஷ்டிரத்தில் ஒரு திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், திருப்பூரில் தனக்கு சொந்தமான திரையரங்கில் இப்படத்திற்காக 6 காட்சிகளை திரையிட்டுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின்படி, ஒரு படத்திற்காக அதிகபட்சம் 5 காட்சிகளை மட்டுமே திரையிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதவாது, முதல்காட்சி காலை 9 மணிக்கு துவங்கி இரவு 12 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டும். லியோ, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்களுக்கு அரசு அனுமதி அளித்த பின்பே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
டைகர் - 3 படத்துக்கு எந்த சிறப்பு அனுமதிகளும் வழங்கப்படவில்லை. ஆனால், இந்தப் படத்தை காலை 7 மணியில் இருந்து திருப்பூர் சுப்ரமணியம் திரையிட்டார் என குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க: ரூ.20 கோடி சம்பளம்! பிரதீப் ரங்கநாதனைக் கைவிட்ட கமல்?
திருப்பூர் சுப்ரமணியம், “லியோ படத்தால் தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை.” எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். தற்போது, அரசின் அனுமதி பெறாமல் தன் திரையரங்கில் அதிக காட்சிகளைத் திரையிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்!