சிவகார்த்திகேயன் நல்ல மனிதர். ஆனால்..: இமான் முன்னாள் மனைவி வேதனை!

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் கூறிய நிலையில், இமானின் முன்னாள் மனைவி இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நல்ல மனிதர். ஆனால்..: இமான் முன்னாள் மனைவி வேதனை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான்.

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

என் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், வலிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய காரணம். அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியதால், அவர் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை." எனத் தெரிவித்திருந்தார்.

இமான் தன் முதல் மனைவியை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதற்குக் காரணம் நடிகர் சிவகார்த்திகேயன்தான் என பல வதந்திகள் கிளம்பின. ஆனால், இமான் இதுகுறித்து வெளிப்படையாக கருத்து சொல்லாமல் இருந்தார்.

தற்போது, அவர் அளித்த இந்தப் பேட்டி திரையுலகில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இதனால், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இமானைக் கடுமையாக தாக்குவதுடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் இந்த சர்ச்சைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இணையதள செய்தி நிறுவனம் ஒன்றில் பதிலளித்திருக்கிறார்.

அதில், “நடிகர் சிவகார்த்திகேயன் நீண்ட காலமாக எங்கள் குடும்ப நண்பராக இருந்தார். அவருக்கு நானும் இமானும் பிரிவதில் விருப்பமில்லை. ஒரு குடும்பம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக அவரால் முடிந்த அளவிற்கு பேசிப்பார்த்தார். ஆனால், இமான் என்னை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்ததால் இந்தப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இமானின் முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவாக இல்லாததால்தான் ‘துரோகம்’ செய்துவிட்டதாகக் கூறுகிறார் என நினைக்கிறேன்.  உண்மையிலேயே, சிவகார்த்திகேயன் மிக நல்ல மனிதர். ஆனால், தான் பேசிய வார்த்தைகளால் சிவகார்த்திகேயனின் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை இமான் யோசித்துப் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவருடன் 12 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. எங்களுக்கு உதவி செய்ய நினைத்த மனிதருக்கு தேவையற்ற சங்கடம். என் விவாகரத்து பிரச்னைகளுக்குப் பின் நான் சிவகார்த்திகேயனிடம் பேசியது கூட கிடையாது. இமானுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்பதால் இப்படியெல்லாம் கூறி வருகிறார். ஒரு பெண்ணைப் பார்த்து வைத்த பின்பே இமான் என்னை மிரட்டி விவாகரத்து வாங்கினார்.” எனக் கூறியுள்ளார். 

இசையமைப்பாளர் இமான் விவாகரத்து பெற்ற ஓராண்டுக்குள் அமலி என்பவரை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com