சென்னையில் நேற்று(செப்.13) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். பின், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வேறு படத்தில் கவனத்தை செலுத்தியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தனுஷ் ஒத்துவராததால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சூர்யா - 43 படத்தின் வில்லன் இவரா?
நடிகர்கள் சிம்பு மேல் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பனும் அதர்வா மேல் தயாரிப்பாளர் மதியழகனும் கொடுத்த புகாரின் பேரிலும் ரெட் கார்டு வழங்கியுள்ளனர்.
மேலும், நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு, செலவு கணக்கு வைக்காமல் இருந்ததாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்காக ரெட் கார்டு வழங்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.