மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: மழையில் நனைந்தபடி... வைரலாகும் அமலா பாலின் புகைப்படங்கள்!
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் மிஷ்கினின் படப்பிடிப்பு முடிந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவாது:
இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். துணை இயக்குநர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க: ‘வெயிலில் மகன்கள் ஒளிர்வதை...’- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான். அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.
என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன்.
லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின்