
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தற்போது காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் ‘காந்தாரா சேப்டர் 1’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டி, “இதற்கு முன்பாக பல கன்னட படங்களை இயக்கியுள்ளேன். ஆனால், கன்னட சினிமாத்துறையை தாண்டி ரசிகர்களை சந்தித்த எனது முதல்படம் காந்தாரா. என்னை இந்தியா முழுவதும் கொண்டு சென்ற படமும் இதுவே. இதனால் எனக்கு அன்பும் மரியாதையும் கிடைத்தது. இதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்; இதனை கூடுதல் பொறுப்பாகவும் பார்க்கிறேன். இந்த வெற்றிக்குப் பிறகு அதிகமாக உழைக்கிறேன். ஆனால் பெரிதாக எதுவும் மாற்றமில்லை. தற்போது ‘காந்தாரா சேப்டர் 1’ படத்துக்காக முழு அர்ப்பணிப்புடன் தயாராகி வருகிறோம்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.