திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்

முன்னணி நடிகர்கள் விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களை தயாரித்த புகழ்பெற்ற தயாரிப்பாளர் வி.ஏ. துரை உடல்நலக் குறைவால் காலமானார்.
Published on

முன்னணி நடிகர்கள் விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களை தயாரித்த புகழ்பெற்ற தயாரிப்பாளர் வி.ஏ. துரை உடல்நலக் குறைவால் காலமானார்.

பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை தயாரித்தவர் வி.ஏ. துரை. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சைபெற்று வந்தார்.

இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.  அவருக்கு வயது 69.

வி.ஏ. துரைக்கு நீரிழிவு நோய் பாதிப்பு காரணமாக ஒரு கால் அகற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

துவக்கத்தில், ஏ.எம். ரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் இணைந்து செயல்பட்டு வந்த வி.ஏ. துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் தயாரித்துள்ளார்.

குறிப்பாக, ரஜினியின் பாபா படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்தார் வி.ஏ. துரை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும், ஆயுள் கால உறுப்பினராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com