இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மரணம்
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 57.
காலை, டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழில், கொம்பன். பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் தந்தை என 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அண்மையில், நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர்.
எதிர்நீச்சல் என்ற நெடுந்தொடரில் நடித்ததன் மூலம், மக்களிடையே மிகவும் பிரபலமடைந்திருந்தார் மாரிமுத்து. இவர் பேசும் வசனங்கள் மீம்களாக மாறி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.
இதையும் படிக்க.. 'ஏதோ கெட்டது நடக்கப்போகுது'.. மாரிமுத்து பேசிய வசனமும் மரணமும்
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், பின்னர், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பசுமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராஜ்கிரண், வசந்த், எஸ்ஜே சூர்யா, சீமான், மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். ராஜ்கிரண் இயக்கி, நடித்த அரண்மனை கிளி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாரிமுத்து. அவரது இயல்பான நடிப்பினால், வில்லன் கதாபாத்திரத்தைக் கூட மக்கள் ரசிக்கும்படியாகச் செய்தவர். இந்த தொடரைப் பார்க்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மாரிமுத்துவின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்ததாகவும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.