அலைபாயுதேவில் இதுதான் நடந்தது.. வைரலாகும் சிம்பு!
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றது. தற்போது, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48-வது படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், சிம்புவின் பழைய விடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த விடியோவில் சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றி பேசியபோது, ’நாகரா’ கருவி குறித்து பேசினார். (நாகரா என்பது வசனம் பேசுவதை ஒலிவாங்கி மூலம் பதிவு செய்யும் முறை)
அப்போது, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் காட்சி ஒன்றில், நாகரா ஒலிவாங்கி காட்சி சட்டகத்துக்குள் (பிரேம்) வந்ததைக் கூறியிருப்பார்.
சில நாள்களுக்கு முன் இந்த விடியோவைப் பகிர்ந்த ரசிகர் ஒருவர், ’அலைபாயுதே படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால், சிம்பு சுட்டிக்காட்டிய தவறை இப்போதுதான் கவனித்தேன்’ எனப் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பலரும் சிம்புவின் சினிமா அறிவைப் பாராட்டி வருவதுடன் அந்த விடியோவையும் வைரலாக்கியுள்ளனர்.