
பிரபல யூடியூப் நிகழ்ச்சியான பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் இணையத்தொடர் கோடியில் இருவர் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
டூ கிரியேட்டிவ் லேப்ஸ் தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ், ஸ்கேலர் நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் நகைச்சுவை தொடராக ‘கோடியில் இருவர்’ உருவாகியுள்ளது.
கோடியில் இருவர் சீரிஸின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்து, கொண்டாடி வருகின்றனர். இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரைய்லர் யூடியூப் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழக யூடியூப் நகைச்சுவை விடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான இணையத் தொடரில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், அரங்குகள் அமைக்காமல் நிஜமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பெங்களூர் பயணித்து அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்தத் தொடரின் கதை. ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன், நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கலான தொடராக இது உருவாகியுள்ளது.
ஸ்டார்ட் அப் துறை பற்றி வரும் பல தொடர்கள் போல அல்லாமல், அந்த துறையின் பின்னணியை முழுக்க முழுக்க உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லும் வகையில், மிகுந்த ஆராய்ச்சிகள் செய்து, அத்துறை வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்தத் தொடரின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக், நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர் (ஓர்ஜுன்), வெட்டிப்பையன் வெங்கட், நிறைமதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெங்களூருவில் பல ஜோர்டிண்டியன் வீடியோக்களை இயக்கிய ஷாகித் ஆனந்த் இந்த சீரிஸினை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இந்த சீரீஸ் டைட்டில் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
போரிஸ் கென்னத், ரோஹித் சுப்ரமணியன், டானில்லா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்தத் தொடருக்கு கதை எழுதியுள்ளனர். ரோஹித் சுப்ரமணியன், போரிஸ் கென்னத் ஆகியோர் வசனங்கள் எழுதியுள்ளனர்.
இந்த இணையத் தொடர் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல், 5 நாட்களுக்கு ஒரு எபிஸோடாக பரிதாபங்கள் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.