வித்யா நம்பர் 1 தொடர் முடிந்ததைத் தொடர்ந்து நடிகை தேஜஸ்வினி கெளடா உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இத்தனை ஆண்டுகளாக அளித்துவந்த ஆதரவுக்கு நன்றி என்றும், புதிய தொடரில் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் தேஜஸ்வினி குறிப்பிட்டுள்ளார்.
ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வித்யா நம்பர் 1 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 650 எபிஸோடுகள் வித்யா நம்பர் 1 தொடர் ஒளிபரப்பானது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாமியாரிடம் நல்ல பேரை வாங்குவதற்காக திருமணத்துக்குப் பிறகு கல்லூரி சென்று பயிலும் பெண்ணின் கதையே வித்யா நம்பர் 1 தொடர்.
இந்தத் தொடரில் நடிகை தேஜஸ்வினி கெளடா முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். கல்லூரி காலம் முதலே மாடலிங் துறையில் இருந்து வந்த தேஜஸ்வினி, நாடகக் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார்.
2016-ல் தெலுங்கு மொழித் தொடரில் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சின்னி என்ற தெலுங்குத் தொடரிலும் நடித்தார். பிறகு கன்னடத்திலும் ஒரு தொடரில் நடித்தார்.
இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2019-ல் தமிழில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற விஜய் தொலைக்காட்சியின் தொடரில் நடித்தார். அதன் பிறகு ஜீ தமிழில் தமிழில் வித்யா நம்பர் 1 என்ற தொடரில் நாயகியாக நடித்து முடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது இந்தத் தொடர் முடிவடைந்ததால், அதில் பணியாற்றிய சக ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை தேஜஸ்வினி பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''வித்யா விடைபெறுகிறாள். வித்யா நம்பர் 1 என்ற இந்த அழகான குடும்பத்தை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த அளவு அன்பு மற்றும் ஆசி வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. இன்னபிற தொடர்கள் மூலம் உங்களை கட்டாயம் மகிழ்விப்பேன். என்னுடைய எதிர்கால பணிகளுக்கும் இதே அன்பை நீங்கள் வழங்க வேண்டும்'' என தேஜஸ்வினி பதிவிட்டுள்ளார்.
அதோட இறுதிநாள் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.