திருட்டுக்கு உதவிய ஆய்வாளர் கைது!

கேரளத்தில் திருட்டுக்கு உதவிய காவல்துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதவி ஆய்வாளர் டிடி.நௌசத்
உதவி ஆய்வாளர் டிடி.நௌசத்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வலில்லபுழா பகுதி சாலையில் ஜேசிபி இயந்திரமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த அனீஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தொடர்ந்து, முக்கோம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் டிடி.நௌசத் தலைமையில் ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டது. 

அப்போது, ஜேசிபி இயந்திரத்தின் காப்பீடு காலம் முடிவடைந்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த ஜேசிபி உரிமையாளரின் மகன் மார்ட்டின் என்பவர் தன் கூட்டாளிகளுடன் இணைந்து விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை காவல் நிலையத்திலிருந்து திருடி, அதற்கு பதிலாக ஆவணங்கள் சரியாக இருந்த மற்றொரு ஜேசிபி இயந்திரத்தை மாற்றி வைத்துள்ளார். 

இந்தக் கடத்தல் விவகாரம் தெரிய வந்ததும் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது. இதில், சிசிடிவி மற்றும் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் அபராதம் செலுத்தியதால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், விசாரணையில் ஜேசிபியை மாற்ற உதவியது காவல் நிலைய உதவி ஆய்வாளர் நௌசத்தான் எனத் தெரிய வந்திருக்கிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த குற்றப்பிரிவு காவல்துறை நௌசத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. தற்போது, சௌசத்தும் பிணையில் விடுதலை ஆகியுள்ளார். 

கைது ஆவதற்கு முன்பே டிடி.நௌசத் பணியிடை நீக்கத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com