ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் முடிவுக்கு வந்தது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற இந்தத் தொடர் 470 நாள்களில் (எபிஸோடு) நிறைவு பெறுகிறது.
படிப்பறிவு இல்லாததால் அவமானங்களை சந்தித்த கிராமத்துப் பெண், படித்தவரை திருமணம் செய்வதைக் குறிக்கோளாக கொண்டு, வாத்தியார் என நினைத்து பள்ளியில் பியூனாக வேலை செய்பவரைத் திருமணம் செய்துகொள்கிறார்.
பியூனாக வேலை செய்வதை அறியாமல், வெளியூர் பள்ளியில் மகன் வாத்தியார் வேலைக்குச் செல்வதாக தாய் நினைத்துக்கொண்டிருக்கிறார். மகனைத் திருமணம் செய்துகொண்டுவரும் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையேயான களம்தான் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் கதைக்களம்.
ஆண்களால் பெண்கள் எந்த அளவுக்கு எளிமையாக ஏமாற்றப்படுகிறார்கள், பெண்கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவற்றை இந்தத் தொடர் வலியுறுத்துகிறது.
படிப்பறிவு இல்லாததால் அவமானப்படுத்தப்பட்ட நாயகி, படித்து பட்டம் பெறுவதைப் போன்று தொடர் முடிவு பெற்றுள்ளது. கணவரும் படித்து உண்மையாகவே ஆசிரியராக மாறிவிடுகிறார்.
இந்தத் தொடரில் நாயகியாக அமுதா பாத்திரத்தில் கண்மணி மனோகரன் நடித்தார். அவருக்கு ஜோடியாக அருண் பத்மநாபன் நடித்தார். மித்ரா அழகுவேல் திரைக்கதை எழுத ஜீவ ராஜன் இயக்கினார்.
இந்தத்தொடர் விரைவில் முடியவடையும் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் இதுவரை மொத்தம் 470 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது.