லியோ படத்தை மறைமுகமாக விமர்சித்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்
லியோ படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மறைமுகமாக விமர்சித்த நிகழ்வு விஜய் ரசிர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிங்கு ராஜா படத்தின் 2 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அந்த இயக்குநருக்கு போன் செய்து முதல் பாதி அருமையாக இருக்கிறது என்றேன். அவரும் கேட்டுக்கொண்டே இருந்தார். அப்படியே இரண்டாம் பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த மதத்தில் அந்த நம்பிக்கையெல்லாம் இல்லை என்றேன். ஒரு தகப்பனே பிள்ளைய அப்படி பலி கொடுக்க மாட்டார்னு சொன்னேன்.
முதல் பாதி நல்லா இருக்குனு சொன்னப்ப கேட்டுக்கிட்டு இருந்தவர், இதை சொன்னவுடன், நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன் சார். அப்புறம் பேசுறேனு போனை வச்சிட்டாரு. அதன் பிறகு அவர் அழைக்கவில்லை. சொன்ன மாதிரியே அந்த படம் வெளியான பிறகு அத்தனை பேரும் ட்ரோல் செய்தார்கள். படம் வெளியாகும் 5 நாள் முன்பே சொன்னேன். அதை சரிசெய்திருக்கலாம்.
ஆனால் அவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் தைரியம் இல்லை. பக்குவம் இல்லை என்றார். விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ படத்தில்தான் தந்தையே பிள்ளையை பலி கொடுக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. எனவே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் லியோ படத்தைத் தான் மறைமுகமாக அவ்வாறு குறிப்பிட்டு மேடையில் பேசியுள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.