
நடிகை சமந்தாவுக்கு நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி கேள்வியெழுப்பியுள்ளார்.
நடிகை சமந்தா, மையோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது சிகிச்சை முறை குறித்த தகவல்களை அவ்வவ்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
சுவாச தொற்றிலிருந்து காக்கும் சிகிச்சையாக ஹைட்ரஜன் பெராக்ஸைட் நெபுலைசர் பயன்படுத்துவது குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு மறுப்பாக டாக்டர் சிரியாக் ஏபி பிலிப்ஸ் (தி லிவர் டாக்டர் என அறியப்படுபவர்) நடிகை சமந்தா மருத்துவ கல்வியறிவற்றவர் என விமர்சித்து பதிவிட்டிருந்தார். காரணம், சமந்தாவை பின்தொடர்பவர்கள் இந்த சிகிச்சை மேற்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக விளக்கமான பதிவொன்றை சமந்தா வெளியிட்டார். அந்த பதிவில், டாக்டர் சிரியாக் பேசிய வார்த்தைகளில் கடுமை இல்லாதிருந்தால் அது இரக்க உணர்வு கொண்டதாக இருந்திருக்கும். குறிப்பாக என்னை சிறையில் தள்ள வேண்டும் என வலியுறுத்தியது குறித்து நான் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. இது, பிரபலமாக இருப்பதால் எதிர்கொள்ள வேண்டியது. நான் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒருவராகவே பதிவிட்டேன், பிரபலமாக அல்ல.
என்னை வைத்து பேசிக் கொண்டிருப்பதற்கு பதிலாக எனது மருத்துவருடன் அவர் உரையாற்றுவது பொருத்தமாக இருக்கும். இரு மருத்துவர்களுக்கு இடையேயான விவாதத்தின் மூலம் நான் கற்றுக்கொள்வதை விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சில மருத்துவர்களும் சமந்தாவின் சிகிச்சை தொடர்பான பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஸ்குவாஷ் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜூவாலா கட்டா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”என்னுடைய ஒரே கேள்வி.. அந்த பிரபலம் தன்னை பின்தொடரும் இத்தனை பேருக்கு அந்த மருத்துவத்தை பரிந்துரைக்கிறாரே.. ஒருவேளை இந்த சிகிச்சை உதவாமல் எதாவது உயிரிழப்பை ஏற்படுத்தினால் நீங்கள் (சமந்தா) பொறுப்பேற்பீர்களா? நீங்கள் குறிப்பிடும் மருத்துவரும் பொறுப்பை ஏற்பாரா?” எனக் கேள்வி கேட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.