இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படம் தோல்விக்கான காரணத்தினை கூறியுள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைதிருந்தார்.
படம் வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றன. வணிக ரீதியாக சரியாக வெற்றியைப் பெறவில்லை எனவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், யூடியூப் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது:
இது உண்மைக் கதை. 2 நிகழ்வுகள் வைத்து நடக்கும் கதை. இதில் பெரிய திருப்பங்கள் இல்லை. எனவே கதையை முன்பின்னாக கூறலாம் என முடிவெடுத்தோம். அப்படி கூறியது முதல் பாதியின் கதை மக்களுக்கு புரியவில்லை எனக் கூறினார்கள். யாரைப் பின் தொடந்து கதையைக் கவனிப்பது எனத் தெரியவில்லை எனப் பலரும் கூறினார்கள். கமர்ஷியல் காரணங்களால் வலுவான கதையை சரியாக கொண்டுவர முடியவில்லை. மேலும் 2மணி நேரம் 20 நிமிஷம் போதவில்லை. இன்னும் 20 நிமிடம் அதிகமான நேரம் இருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும்.
இந்தக் கதையில் மொய்தீன் பாய் முதலில் 10 நிமிடம் மட்டுமே இருந்தார். பின்னர் அதில் சூப்பர் ஸ்டார் என்ற ஒருவர் வந்ததால் அவருக்கு ஏற்றதுபோல கதை மாற்றியமைக்கப்பட்டது. முதலில் ரஜினி 2ஆம் பாதியில்தான் வருவார். ஆனால் படம் ரிலீஸுக்கு 2நாள் முன்பாக கமர்ஷியல் நோக்கத்துக்காக நாங்கள் முதல் பாதியிலெயே அவரை வரவழைக்க வேண்டுமென மீண்டும் எடிட்டிங்கில் உட்கார்ந்தோம்.
படத்தின் ஆன்மாவாக இருப்பவர் அதைப் பற்றிப் பேசுபவர் செந்தில். உண்மையான கதை; வலுவான கதை. ஆனால் மொய்தீன்பாய் என்ற கதாபாத்திரம் உள்ளே வந்ததும் அது மாறிவிட்டது. சூப்பர் ஸ்டாரை காட்டியப் பிறகு மக்கள் யாரும் எதையும் கவனிக்கவில்லை. அவரைவிடவும் முக்கியத்துவம் நிறைந்த காட்சிகளை எங்களால் எடுக்க முடியவில்லை. எல்லாவற்றையும் சூப்பர் ஸ்டார் மிஞ்சி நிற்கிறார்.
நடிகராக ரஜினியை சூப்பர் ஸ்டார் மிகவும் மிஸ் செய்கிறார். நான் அவரை வெறுமனே மொய்தீன் பாயாக சண்டை இல்லாம வைத்திருந்தால் அது நியாமானதாக இருக்காது. எனக்கு இயக்குநராக இதில் மகிழ்ச்சியாக இருந்தது.பல விசயங்களையும் கற்றுக்கொண்டேன். இனி அடுத்தப் படத்தில் மக்கள் எப்படி எதிர்பார்த்தார்களோ அப்படி கொடுப்பேன் எனக் கூறினார்.