நடிகர் ரஜினியுடன் நடிகைகள் நிக்கி கல்ராணி, ரித்திகா சிங் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
ஜெயிலர், லால் சலாம் படத்தின் வெற்றியைதைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகைகள் ரித்திகா சிங், நிக்கி கல்ராணி ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
நடிகை ரித்திகா சிங், “அவரது கருணை, அவரது ஒளி, அவரது இருப்பு உண்மையில் நிகரற்றது. நான் இப்போது அவருடன் படப்பிடிப்பில் பணிபுரிந்து வருகிறேன். வாய்ப்புக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.
நிக்கி கல்ராணி விமானப் பயணத்தின்போது, “இதுவரையிலான எனது சிறந்த விமானம் இதுதான். பின்குறிப்பு: என்னுள் இருக்கும் சிறிய ரசிகப் பெண்ணால் பயணம் முழுவதும் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.