இயக்குநரும் நடிகருமான சசிகுமார் ஆடுஜீவிதம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (மார்ச் 28 ) இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கூறியதாவது:
பிளெஸ்ஸி சாரும் பின்னே நானும்
சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் கிடைத்தது அவருடைய நட்பு. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். பெரும்பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.
திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம்.
பிளெஸ்ஸி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்.