பிரபல தமிழ் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி தொடரில் முதல்முறையாக டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பாலாஜி அதன்பின் டேனியல் பாலாஜி ஆனார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் ’ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, பிகில் போன்ற பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். வடசென்னை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இழப்புக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோவில் கட்டுவது போன்ற திருப்பணிகளையும் டேனியல் பாலாஜி செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கண் தானம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் மறைந்ததும் அவரின் கண்களை மருத்துவர்கள் தானத்திற்காக எடுத்துள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.