ரோஜா தொடரில் நாயகனாக நடித்துவந்த நடிகர் சிபு சூர்யன் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மகனின் பிறந்தநாளையொட்டி அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் படங்களை சிபு சூர்யன் பகிர்ந்துள்ளார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று ரோஜா. இந்தத் தொடர் 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பானது. அந்த காலகட்டத்தில் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்ததால், பலரின் கவனத்தையும் ரோஜா தொடர் ஈர்த்தது.
இத்தொடரில் இடம்பெறும் லாஜிக் இல்லாத ஆக்ஷன் காட்சிகள் மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகவை. இதேபோன்று நாயகன் சிபு சூர்யன் - நாயகி பிரியங்கா இடையேயான காதல் காட்சிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. சமூகவலைதளங்களில் இந்த தம்பதிகளின் காதல் காட்சி விடியோக்களை ரசிகர்கள் இன்றளவும் பகிர்ந்து வருகின்றனர்.
ரோஜா தொடருக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா -2 தொடரில் சிபு சூர்யன் நடித்தார். தற்போது சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் என்னும் புதிய தொடரில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இதனிடையே தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டு ரசிகைகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். தனது மகனின் பிறந்தநாளையொட்டி அவர் தனது மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை சிபு சூர்யன் பகிர்ந்துள்ளார்.
அதில், ''எனக்கு உறுதுணையாக நீ கிடைக்க நான் என்ன பாக்கியம் செய்தேன் என நான் அவ்வபோது வியப்பதுண்டு. அதற்காக பல நேரங்களில் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். உன் மூலம் என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்துள்ளார் அவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே'' எனப் பதிவிட்டுள்ளார்.