மலையாள சின்னத்திரை நடிகை ஸ்வாசிகா தமிழ் சின்னத்திரை நடிகர் பிரேம் ஜேக்கப்பை திருமணம் செய்துள்ளார்.
பிரமாண்ட முறையில் நடைபெற்ற திருமணத்தில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
நடிகை ஸ்வாசிகா முதன்முதலில் தமிழில் வைகை என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோரிபாளையம், சாட்டை உள்ளிட்ட படங்களில் கவனிக்கத்தக்க பாத்திரங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவைத் தொடர்ந்து 25க்கும் அதிகமான மலையாள திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மலையாள சின்னத்திரை தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார். சின்னத்திரை தொடர்களில் நாள்தோறும் மக்களை சந்தித்த ஸ்வாசிகாவுக்கு, மலையாள சின்னத்திரையில் ரசிகர்கள் குவிந்தனர்.
இதனிடையே இவர், நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சமீபத்தில் பிரமாண்ட முறையில் நடைபெற்றது.
நடிகர் பிரேம் தமிழ் சின்னத்திரை நடிகராவார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஸ்வாசிகா - பிரேம் தம்பதியின் திருமணத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, திலீப், ஸ்வேதா, அணு ஸ்ரீ உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு இவர்கள் நண்பர்களுக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஸ்வாசிகா - பிரேம் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.