
எல்லோரும் நினைப்பது போல திரைத்துறை வேலை செய்ய உகந்த இடம் கிடையாதென தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை டாப்ஸி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
ஹிந்தியில் டோபாரா, பிங்க், தப்பாட் என பல படங்கள் கவனம் ஈர்த்தன. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் டாப்ஸி தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.
நேர்மைக்கு மரியாதை இல்லை
டாப்ஸி பண்ணு நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:
கடின உழைப்பை செலுத்தினால் எல்லாவற்றையும் அடையலாம் என்ற பொதுவான கொள்கை திரைத்துறையில் செல்லுபடியாகாது. இங்கு எல்லாம் நியாயமாக இருப்பதில்லை. நீங்கள் திரைத் துறையில் நேர்மையை எதிர்பார்த்தால் எதுவும் நடக்காது. அது அநியாயமாக இருக்கும்.
நீங்கள் பல விஷயங்கள் கேள்விப்படுவீர்கள். உங்களது திமிரை ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் உங்களுக்கு வருத்தம்தான் நேரிடும். தவிர கெட்ட விஷயங்களைக் கேட்பதற்கு பழகிவிடுவீர்கள்.
இது பாலிவுட்டின் பிரச்னை மட்டும் இல்லை. நான் அதில் பாதிக்கப்பட்டவளும் இல்லை.
ஆப்ஷன் பி இருக்க வேண்டும்
எனக்கு ஆப்ஷன் பி இருக்கிறது. பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ளேன். எனக்கு வேலை இருக்கிறது நான் செய்வேன். எம்பிஏ செய்ய வேண்டும். அதனால் எனக்கு எல்லா வழிகளுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.
நமது வெற்றி ரசிகர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ரசிகர்கள் நாயகனை மையமாக வைத்து உருவாகும் படத்தை திரையரங்குகளில் பார்க்க விரும்பினால் நாம் எப்படி வெற்றியடைய முடியும்? வாய்ப்புகள் கொடுப்பதற்கு பதிலாக திரைத்துறை வெளியே தள்ளுகிறது என்றார்.
கடைசியாக திரையரங்கில் ‘டன்கி’ படமும் நெட்பிளிக்ஸில் தில்ரூபா படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.