
நடிகர் விஜய்யின் கரூர் பரப்புரையில் ஏராளமானோர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றில் தலைவர்கள் உருவாகும்போதும் அவர்கள் பிரபலங்களாகும்போதும் மக்கள் கூட்டம் அலையென அவர்களைத் தேடிச்செல்வது வழக்கம்.
அதிலும், சிலர் பெரும் பிரபலத்தை வைத்து தங்களைத் தலைவர்களாக மாற்றும்போது அவர்களைக் காண மக்கள் ஆயிரக்கணக்கில் காத்திருப்பது எதிர்பார்க்கக்கூடிய விஷயம்தான்.
ஆனால், இந்த மக்கள் கூட்டத்தில் ஏராளமானோர் நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி பலியாவதை என்னவென்று சொல்வது?
தமிழக வரலாற்றில் ஓர் அரசியல் தலைவருக்காக வந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிகழ்வுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய நிகழ்வும் உண்டு.
பிப். 18, 1992 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தின்போது மகாமகக் குளத்தில் புனித நீராட அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் வந்தபோது அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களைக் காணும் ஆவலால் ஏற்பட்ட நெரிசலில் 48 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமும் அடைந்தனர்.
அதன்பின், தமிழக வரலாற்றில் ஒரு அரசியல் தலைவரைப் பார்க்கப் போய் அதனால் அதிக பலிகள் ஏற்பட்டது கரூரில்தான் நிகழ்ந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் இன்று மாலை நாமக்கல்லில் தன் பரப்புரையை முடித்துவிட்டு இரவு 7 மணிவாக்கில் கரூரில் சில நிமிடங்கள் பேசிவிட்டு, கிளம்பியதும் ஏராளமானோர் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர்.
இதையும் படிக்க: கரூர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
ஒவ்வொருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுவரை (இரவு 10 மணி நிலவரப்படி) 31 பேர் பலியானதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மகாமகம் சம்பவம் இன்று வரை தமிழக வரலாற்றில் ஒரு துயராகவே நீடிக்கும் நிலையில், இன்று நடிகர் விஜய்யால் ஏற்பட்ட பலியால் கரூர் இன்னொரு மகாமகம் போன்றே காட்சியளிக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.