காஃபீ வித் கரண் ‘பாகுபலி ஸ்டார்ஸ்’ ல் வெளியான அப்பட்டமான உண்மைகள்!

கரண் ஜோகரின் காஃபீ வித் கரணில் ஏடாகூட கேள்விகளுக்குப் பஞ்சமிருக்காது. இந்த எபிசோடிலும் அப்படியான கேள்விகள் இருக்கத்தான் செய்தன.
காஃபீ வித் கரண் ‘பாகுபலி ஸ்டார்ஸ்’ ல் வெளியான அப்பட்டமான உண்மைகள்!

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகரின் ‘காஃபீ வித் கரண்’ எனும் ரியாலிட்டி ஷோ இந்திய ரசிகர்களிடையே வெகு பிரசித்தம். ஸ்டார் வேர்ல்டில் வெளியாகும் இந்த நிகழ்ச்சியின் 6 வது எபிசோட் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் பாகுபலி நட்சத்திரங்களான பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் அத்திரைப்படத்தின் இயக்குனரான எஸ் எஸ் ராஜமெளலி மூவரும் தான். இவர்கள் மூவரையும் தன்னுடைய ஸ்பெஷல் விருந்தினர்களாக அழைத்துச் சிறப்பிக்க... தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை என்கிறார் கரண். காரணம் மூவரையும் மீண்டும் ஒன்றாகச் சேர்ப்பது அத்தனை கடினமானதாக இருந்ததாம் அவருக்கு. எப்படியோ ஒருவழியாக ராணாவின் மூலமாக மற்ற இருவரையும் சிறிது, சிறிதாக மசிய வைத்து... தன்னுடைய ஷோவால் இன்றைய பான் இந்திய ஸ்டார் & இயக்குனரான ராஜமெளலியின் பெர்சனாலிட்டிக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கான கேள்விகளையே தான் கேட்கவிருப்பதாக உறுதிமொழியளித்த பின்னரே மூவரும் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டதாக கரண் தெரிவித்தார்.

கரண் ஜோகரின் காஃபீ வித் கரணில் ஏடாகூட கேள்விகளுக்குப் பஞ்சமிருக்காது.

இந்த எபிசோடிலும் அப்படியான கேள்விகள் இருக்கத்தான் செய்தன.

ராணாவிடம்... திரிஷாவுக்கும் அவருக்குமிடையே இருந்த டேட்டிங் நாட்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

ராணாவின் பதில்... ஆம், நாங்கள் இருவரும் 10 ஆண்டுகள் நண்பர்களாக இருந்தோம்... டேட்டிங்கில் இருந்த போது தான் தெரியவந்தது தங்களுக்குள் சில விஷயங்கள் வொர்க் அவுட் ஆகாது என... எனவே  அந்த உறவு அப்படி முடிந்தது என்பதாக இருந்தது.

பிரபாஸிடம் அவரது ஃபார்ம் ஹவுஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது... அப்படி என்ன தான் ஸ்பெஷல் அந்த ஃபார்ம் ஹவுஸில் என்ற கேள்விக்கு பிரபாஸ் பதில் சொல்வதற்கு முன் ராஜமெளலி சொன்ன பதில்... அந்த ஃபார்ம் ஹவுஸுக்கு பிரபாஸின் வாழ்க்கையில் முக்கியமான இடமுண்டு. அங்கே அமர்ந்து கொண்டு நாங்கள் விடிய, விடிய பேசி இருக்கிறோம். நள்ளிரவு 2 மணிக்கு வாலிபால் ஆடியிருக்கிறோம். அங்கே ஒரு ஜிம் இருக்கிறது. சாப்பிட... வொர்க் அவுட் செய்ய , நண்பர்களுடன் நேரம் காலம் பாராமல் விளையாட என அந்த ஃபார்ம் ஹவுஸை பிரபாஸ் பயன்படுத்தி வருகிறார் என்றார். 

தன்னியல்பில் மிகச் சோம்பேறியான பிரபாஸ்... ஷூட்டிங் என்று இறங்கி விட்டால் ஆளே மாறிவிடுவார். அவருடைய ஒட்டுமொத்த உற்சாகமும் இயக்குனர் ஆக்‌ஷன், கட் சொல்வதற்குள் தான் அடங்கி இருக்கிறது என்று ராணாவும், ராஜமெளலியும் பிரபாஸை கலாய்த்தார்கள்.

பிரபாஸ் இடம்பெறும் நிகழ்ச்சியில் ஸ்வீட்டி அலைஸ் அனுஷ்கா ஷெட்டி குறித்த கேள்வி இல்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெறுமா என்ன? ஏனெனில் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள். கூடிய விரைவில் திருமணச் செய்தி வரும் என்றெல்லாம் ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கையில் கரண் ஜோகர் மட்டுமென்ன விதிவிலக்கா?

பிரபாஸ்... நீங்களும் அனுஷ்கா ஷெட்டியும் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறதே? அது உண்மையா? என்று கேட்டார்.

‘நோ’ நோ வே என்று அதற்கு மறுப்புத் தெரிவித்த பிரபாஸ்... யாருடன் இணைந்து நடிக்கையில் நீங்கள் இணக்கமாக அல்லது வசதியாக உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனுஷ்கா ஷெட்டியின் பெயரையே சொல்லி பிரனுஷ்கா (பிரபாஸ், அனுஷ்காவை இப்படிச் சுருக்கிக் கொண்டாடும் ரசிகர் கூட்டம் இணையத்தில் இருக்கிறது) ரசிகர்களின் வயிற்றில் கொஞ்சம் பால் வார்த்தார். 

ஏன் அப்படி? என்ற கேள்விக்கு அவரளித்த விளக்கம். டோலிவுட் நடிகைகளில் அனுஷ்கா ஷெட்டியுடன் தனக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு உண்டென்றும் அவர் மிகச்சிறந்த திறமை மிக்க நடிகை என்றும் கூறினார். இந்த பதிலை கரண் எப்படி எடுத்துக் கொண்டார் என்பதை அவரது விஷமத்தனமான புன்னகையை மீறி அறிய முடியவில்லை.

பிரபாஸ், ராணா இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என நீங்கள் நம்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு இயக்குனர் ராஜமெளலி அளித்த பதில்;

ராணா தான் முதலில் திருமணம் செய்வார்.... அந்தத் திருமணம் நிலைக்குமா, நிலைக்காதா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பையனுடைய வாழ்க்கை கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. இன்னின்ன விஷயங்களை இந்திந்த காலகட்டங்களில் முடித்தே ஆக வேண்டும் என திட்டம் வகுத்து வாழும் வாழ்க்கை ராணாவுடையது. எனவே நிச்சயமாக பிரபாஸுக்கு முன்னால் ராணாவின் திருமணம் முடிந்து விடும்.

பிரபாஸ் திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா? என்று கேட்டால்... என்னைப் பொறுத்தவரை அவர் திருமணமே செய்து கொள்ளவே மாட்டார் என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பிரபாஸின் சோம்பேறித்தனத்துக்கு முன் திருமணம் என்ற கமிட்மெண்ட்டெல்லாம் மிகப்பெரிய காரியமாக அவருக்குத் தோன்றக்கூடும். முதலில் பெண் தேட வேண்டும், பிறகு பத்திரிகை அடிக்க வேண்டும், அப்புறம் கல்யாண மண்டபத்தைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். இந்த மாதிரியான காரியங்களில் எல்லாம் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படாமல் சும்மா ஹாயாக சிங்கிளாகவே இருக்கலாம் என்று அவர் முடிவெடுத்து விட்டால் அதில் ஆச்சர்யமில்லை என்றார். இந்த பதில் நகைச்சுவைக்காகவா அல்லது நிஜமாகவேவா? என்பது அவர்கள் நால்வர் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு நட்சத்திரங்களுமே தங்களிடம் இருக்கிற குணாதிசயங்களில் அடுத்தவரிடன் இல்லாததாகக் குறிப்பிட்டது ஒரே விஷயத்தைத் தான்.

ராணா ஒரு எக்ஸ்ட்ரோவர்ட்

பிரபாஸ் ஒரு இண்ட்ரோவெர்ட் 

இந்த இருவரின் குணாதிசயங்களையும் மிகச்சரியாகப் பயன்படுத்தி பாகுபலி 1 & 2 திரைப்படங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிக் பார்க்கும் வண்ணம் ஆக்கித்தந்த இயக்குனர் ராஜமெளலி மட்டுமே பேலன்ஸ்டான மனநிலை கொண்ட படைப்பாளி என்று புரிந்து கொள்ள முடிந்தது.

மூவருமே தங்களுக்குப் பிடித்த திறமையான நடிகை எனும் கேள்விக்கு தீபிகா படுகோனின் பெயரையே கூறினார்கள்.

இருவரில் கெட்ட பையன் யார்? என்ற கேள்விக்கு ரசிகர்கள் ராணாவின் பெயரை எதிர்பார்த்திருந்த வேளையில் ராஜமெளலி பிரபாஸின் பெயரைச் சொல்லி ஜெர்க் ஆக்கினார்.

ஆம், உண்மையில் ராணாவை விட பிரபாஸ் தான் கெட்ட பையன் என்கிறார் ராஜமெளலி.... எந்த விஷயத்தில் என்றால், 

உணவு விஷயத்தில்... தனக்குப் பரிமாறப்பட்ட உணவு வகைகளில் தான் விரும்பும் அல்லது தான் தேடும் உணவு இல்லையென்றால் பிரபாஸ் அன்றைய உணவை தான் உண்ணப்போவதில்லை என்று அறிவித்து விடுவாராம். எந்த நேரத்தில் என்றால் அது நள்ளிரவைத் தாண்டி 2 மணியாக இருந்தாலும் சரி தானாம். அவரைச் சமாதானப்படுத்த அவர் கேட்ட உணவை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தால் மட்டுமே அன்றைய பொழுது நல்ல பொழுதாகக் கழியும் என்கிறார். இதை அவர் நகைச்சுவையாகப் பகிர்ந்த போதும் குரலில் கொஞ்சம் கண்டிப்பு இருப்பதாகத்தான் பட்டது.

அதற்கு பிரபாஸின் பதில்...

உணவு விஷயத்தில் மட்டும் தான் இத்தனை கடுமையே தவிர பிறவிஷயங்களுக்கு இல்லை என்றார்.

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் கதையாக ரேபிட் ஃபயர் ரவுண்டில் பிரபாஸிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி...

எதையாவது விட்டுத் தருவதென்றால் இந்த இரண்டில் எதை விட்டுத் தருவீர்கள் ஃபுட் ஆர் செக்ஸ் என்ற கேள்விக்கு...

செக்ஸ் என பட்டென பதில் வந்தது.

ராணாவுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரை... என்ற கேள்விக்கு;

திரிஷாவுடனான நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முயற்சிக்கலாம் என்றார். எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்து முடிந்த பின் கட்டக் கடைசியாக ஆடி கார் பரிசு பெறப்போவது யார் என்று நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் காத்திருக்கையில் மூவரில் காஃபீ வித் கரணின் அனைத்து அன்பளிப்புகளையும் வெல்லும் அளவுக்கு திறமையானவராக இருந்தது இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி மட்டுமே.

மனிதர் அந்த அளவுக்கு வெகு யதார்த்தமாக பதில் சொல்லிக் கொண்டே வந்ததோடு கரண் ஷோவின் ஆடி கார் மற்றும் கிஃப்ட் ஹாம்பர் பரிசையும் வென்றெடுத்துச் சென்றார்.

கரண் ஜோகர் தனது விருந்தினர்களின் மனத்தடையை உடைத்து அவர்களிடம் இருக்கும் ரகஷியங்களைக் கக்க வைப்பதில் சூரர் என்று பெயரெடுத்திருந்தார் ஆனால் அவரே கூட இந்த பான் இந்திய ஸ்டார்களின் பதிலில் திருப்தியுற்றிருப்பாரா என்பது சந்தேகமே! பொய்யான பதில்களுக்கு பெனால்ட்டியாக காஃஃபி அருந்தும் தண்டனையில் அதிகம் காஃபி அருந்தியது பிரபாஸாகத்தான் இருக்க முடியும். 

காஃபி வித் கரணில் ஹைலைட் என்றால் அது விருந்தினர்கள் வெளியிடும் அப்பட்டமான உண்மைகளாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை அவர்கள் அணிந்து வரும் ஸ்டைலான உடைகளாகவும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார்கள் பாகுபலி நட்சத்திரங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com