2019-2020-ல் இளையராஜா: பாராட்டு விழாக்களும் தொடரும் சர்ச்சைகளும்!

ஒரு வருட காலக்கட்டத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு...
2019-2020-ல் இளையராஜா: பாராட்டு விழாக்களும் தொடரும் சர்ச்சைகளும்!


இளையராஜாவின் இசைக்கு மயங்காத தமிழன் கிடையாது. திருக்குறள் போல காலத்தால் அழியாதது ராஜாவின் இசை.

இளையராஜா தனது 77-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

2019 ஜூன் மாதம் முதல் 2020 மே மாதம் வரையிலான இந்த ஒரு வருட காலக்கட்டத்தில் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு:

ஜூன் 2: சென்னையில் நடைபெற்ற இசை கொண்டாடும் இசை

இளையராஜாவின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி ‘இசை கொண்டாடும் இசை' என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை "தினமணி' மற்றும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக இருந்து நடத்தின.

இந்த நிலையில் இளையராஜா பேசியதாவது: இசைச் சங்கத்துக்கும், இசைக் கலைஞர்களுக்கும் என்னுடைய அன்பளிப்பாக ஒரு நல்ல காரியம் செய்ய இருப்பதாகவும், அது என்னுடைய சொந்த முயற்சி, இது மக்களிடம் வசூல் செய்து நடத்துகிற காரியம் அல்ல என்றும் சொல்லியிருந்தேன். அது என்னவென்றால், திரையிசை கலைஞர்கள் சங்கத்துக்கான கட்டடத்தை கட்டித் தர இருக்கிறேன். அதற்கான மொத்தச் செலவையும் ஏற்கிறேன். இதற்கான செலவு இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட பணம் அல்ல. அதையெல்லாம் மீறி இதைச் செய்கிறேன். இதுகுறித்த திட்டம் வெகு நாள்களாக நடந்து வருகிறது. இப்போதுதான் ரசிகர்கள் முன்பு அறிவிக்கிறேன். அந்த கட்டட மாதிரி வரைவை சங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்றார் இளையராஜா. சங்க கட்டட மாதிரியை, திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் இளையராஜா வழங்கினார்.

ஜூன் 2: இளையராஜா இசையில் மீண்டும் பாடிய எஸ்.பி.பி.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படத்துக்காக இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் - தமிழரசன். இயக்கம் - பாபு யோகேஸ்வரன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இப்படத்துக்கான பாடல் பதிவு நடந்தது. இதில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடினார். இது குறித்து படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் கூறும்போது, "சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக் கலை நிகழ்த்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி நடித்து வரும் "தமிழரசன்' படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இசையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜேசுதாஸ் இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை ஆச்சரியமாக கொண்டாடி வந்தவேளையில், இளையராஜாவின் இசையில் இப்போது இந்தப் படத்துக்காக எஸ்.பி.பி., ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி. குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமுகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின்போது இருவரும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டனர். கவிஞர் பழனிபாரதி எழுதியிருக்கும் "வா வா என் மகனே' எனும் இந்தத் தாலாட்டுப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குநர்.

ஜூன் 4: அனுமதி இல்லாமல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தத் தடை 

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை முறையான அனுமதி இல்லாமல் ஆன்லைன், வானொலி நிறுவனங்கள், இசைப் போட்டிகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், என்னுடைய அனுமதியைப் பெறாமல், அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம், கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இசை நிறுவனங்கள் நான் இசையமைத்த திரைப்படப் பாடல்களை விற்பனை செய்து வருகின்றன. அந்தத் திரைப்படப் பாடல்களுக்கான முழுமையான உரிமை என்னிடம் தான் உள்ளது. எனவே அந்த பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக மாற்றி உத்தரவிட்டார். மேலும், இளையராஜாவின் பாடல்களைத் திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்த தடை விதிக்கிறேன். குறிப்பாக ஆன்லைன், வானொலி நிறுவனங்கள், இசைப் போட்டிகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தக் கூடாது. இந்த பாடல்களை பயன்படுத்த வேண்டும் எனில், முறையான அனுமதி பெற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இளையராஜாவின் பாடல்களை 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி, அகி இசை நிறுவனம் தொடர்ந்த வழக்கை, நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

ஜூன் 9: கோவையில் இளையராஜா இசை நிகழ்ச்சி

ராஜாதி ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கோவையில் ஜூன் 9 அன்று நடைபெற்றது. 

அருண் மீடியாஸ், மஹம் எண்டர்பிரைசஸ், சியா அமைப்பு ஆகியவற்றுடன் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக இணைந்து வழங்கிய இந்த இசை நிகழ்ச்சி, கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இளையராஜா நேரடியாகப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியில் ஹங்கேரி நாட்டின் இசைக் கலைஞர்களும் பங்கேற்றார்கள். இதில், பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, பாடகி உஷா உதுப் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பாடினார்கள். 

ஜூன் 12: இளையராஜா இசையமைப்பில் ஆதி நடிக்கும் கிளாப்!

ஈரம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆதி, தற்போது இளையராஜா இசையமைக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார். கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தடகள வீரனாக நடிக்கிறார் ஆதி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிருத்வி ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜூலை 5: காக்கா முட்டை மணிகண்டன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிக் கவனம் அடைந்துள்ள இயக்குநர் மணிகண்டனின் அடுத்தப் படம் - கடைசி விவசாயி. மணிகண்டன் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். விவசாயி வேடத்தில் நல்லாண்டி நடித்துள்ளார். குற்றமே தண்டனை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் டிரெய்லர் டிசம்பர் மாதம் வெளியானது.

செப்டம்பர் 11: மிஷ்கினின் துப்பறிவாளன் 2 படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா!

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது.  மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இத்தகவலை விஷால் அறிவித்துள்ளார். திரையுலகில் 15-ம் ஆண்டில் அடியெடுத்தும் வைக்கும் நான், முதல்முறையாக இளையராஜா சார் இசையமைப்பில் நடிக்கிறேன்  என்று கூறியுள்ளார் விஷால். 

2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இளையராஜா தான் இசை. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு -  தன்வீர் மிர். 

துப்பறிவாளன் 2 படத்துக்கும் இளையராஜா இசையமைப்பதின் மூலம் முதல்முறையாக மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு அவர் இசையமைக்கிறார்.

செப்டம்பர் 14: இளையராஜா - யுவன் இசையமைக்கும் ‘மாமனிதன்’ படத்துக்குப் பாடல்கள் எழுதிய பா. விஜய், பழனி பாரதி!

ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஒருவேளை இந்தப் படத்திலாவது அது சாத்தியமாகுமா என. ஆனால் வழக்கம்போல ரசிகர்கள் எதிர்பார்க்கும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி இந்தமுறையும் நிகழவில்லை.

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைக்கிறார்கள். மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுபெற்றது. 

சீனு ராமசாமியின் முதல் படம் தவிர்த்து அடுத்து அவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே ஆகிய படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. அதுமட்டுமல்லாமல், தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்தக் கூட்டணி தற்காலிகமாகப் பிரிந்துள்ளது. 

கமல் நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்குப் பிறகு கருத்துவேறுபாடுகள் காரணமாக இளையராஜா - வைரமுத்து கூட்டணி பிரிந்தது. சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் தொடருமா என்கிற சிறு நம்பிக்கையும் ஆவலும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இப்படத்தின் பாடல்கள் குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டில், பா. விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் மாமனிதன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் பா. விஜய், பழனி பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

செப்டம்பர் 29: என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமைப்படுத்த வேண்டாம்: சீனு ராமசாமி உருக்கம் 

என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என்று இயக்குநர்  சீனு ராமசாமி தெரிவித்துளார்.

சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ’மாமனிதன்’ படத்தில் இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜாவிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.”

திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்றேன். அது சரி என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழுப் படத்தையும் அவருக்குக் காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜாவுக்கு இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார். அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களைக் கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.

படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கும் கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்“ என்றேன். யுவன் தரப்பில் “பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். ஓர் இயக்குநராக முழு சுதந்திரத்தைத் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4-வது படம். இளையராஜாவுடன் பணிபுரியும் முதல் படம் .

’மாமனிதன்’ எனக்கு 7-வது படம். இளையராஜா மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராகப் படம் பிடித்திருக்கிறேன். இளையராஜாவின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன். இதில் என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்குச் சிபாரிசு செய்யவில்லை.

என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது உண்மையல்ல. நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.’தர்மதுரை’யில் வைரமுத்து பாடல் வரிகளுக்குத் தேசிய விருது கிடைத்தது. இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிகிறோம், நிச்சயமாக இந்தப் படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமெனக் கருதுகிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அக்டோபர் 31: கமல் 60 விழாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி!

நடிகர் கமல் ஹாசனின் 60 ஆண்டு திரையுலகப் பயணத்தை விமரிசையாகக் கொண்டாடும் வகையில், 3 நாள்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ரஜினி பங்கேற்கிறார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உங்கள் நான் - 60 மகத்தான வருடங்கள் நிகழ்வை இளையராஜா தொடங்கி வைக்கிறார். கமலைப் பாராட்டும் வகையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., கமல் உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமலுடன் 44 ஆண்டுகள் நட்பைக் கொண்டுள்ள ரஜினி காந்த் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். கமலுடனான அனுபவங்கள் குறித்து அவர்கள் மேடையில் பகிர்ந்துகொள்வார்கள். உங்கள் நான் நிகழ்ச்சி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நவம்பர் 1: இதயம் என் இதயத்தைத் தொட்டது: இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா!

பாரதிராஜா - இளையராஜா கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. 1977-ல் 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்த இருவர் கூட்டணியும் 1992-ல் நாடோடி தென்றல் படம் வரை நீடித்தது. இதன்பிறகு இந்தக் கூட்டணி பிரிந்தது.

இந்நிலையில் நீண்ட நாளைக்குப் பிறகு தேனியில் இளையராஜாவைச் சந்தித்ததாக இயக்குநர் பாரதிராஜா சமூகவலைத்தளத்தில் பதிவு எழுதியுள்ளார். இயலும் இசையும் இணைந்தது... இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில் என்று எழுதியுள்ளார் பாரதிராஜா. மேலும் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

நவம்பர் 16: பெங்களூரில் இளையராஜா இசை நிகழ்ச்சி! 

கா்நாடகத்தில் முதல்முறையாக பெங்களூரில் இளையராஜாவின் இசை விழா நடைபெற்றது. ‘ஜனும ஜனுமத அனுபந்தா’, ’கா்ஜனே’, ‘கீதா’, ’நீ நன்ன கெல்லலாரே’,’ஷிகாரி’,’பாரி பா்ஜரி பேட்டே’,‘பல்லவி அனுபல்லவி’,‘நியாய கெத்திது’,‘நியாய பயலு’ போன்ற நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளாா். அப்படங்களில் இடம்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான பாடல்கள் கன்னட மக்களிடையே இன்றைக்கும் பிரபலமாகியுள்ளது. இதனால் இளையராஜாவுக்கு கன்னட ரசிகா்கள் ஏராளமாக உள்ளனா். பெங்களூரு கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள தி கான்சா்ட் அரீனா அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

தனது 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் இசை விழாக்களை நடத்திவரும் இளையராஜா, தனது இசையில் வெளியான கன்னடப் பாடல்களுடன் இசை விழாவைத் தொடங்கினார். கன்னடம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படப் பாடல்களும் இசை விழாவில் இடம்பெற்றன. முன்னதாக, இசை விழாவை பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் தொடக்கி வைத்தார். இந்த இசைவிழாவின் ஊடகப் பங்குதாரராக விளங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கர்நாடக பொது மேலாளர் சுரேஷ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடந்த இசை விழாவில் 100 இசைக்கலைஞர்களுடன் பிரபல பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, உஷா உதூப், மது பாலகிருஷ்ணன், முகேஷ், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் கலந்துகொண்டு பாடினர்.

இசை விழாவில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் எடியூரப்பா, இளையராஜாவுக்கு மாலை அணிவித்து கெளரவித்தார். அதன்பிறகு முதல்வர் எடியூரப்பா பேசியது:

இசை உலகின் தலைமகனாக விளங்கும் இளையராஜா பெங்களூரில் முதல்முறையாக நடத்தும் இசை விழாவில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுகிறேன். கடந்த 40 ஆண்டுகளில் அவரது இசையில் வெளியான பாடல்களை கேட்டு ரசித்தவர்களில் நானும் ஒருவன். கன்னட திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜன்நாகேந்திரா கொடிகட்டி பறந்த காலத்தில், கன்னடப் படங்களுக்கு இளையராஜா இசையமைத்து கன்னட ரசிகர்களின் மனங்களை வென்றிருந்தார். இன்றைக்கும் அவர் இசை அமைத்த கன்னடப் பாடல்கள் கர்நாடகத்தில் தினமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட இசைக் கலைஞரான இளையராஜா பெங்களூரில் இசை கச்சேரியை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இசை நிகழ்ச்சிக்கு இடையே இளையராஜா பேசுகையில், "நான் இசை அமைத்து வெளியான முதல் படம் "அன்னக்கிளி' வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எனக்கு ரசிகர்களிடையே தனிமதிப்பு கிடைத்தது. அதன் விளைவாக எனக்கு புதிய உற்சாகம் கிடைத்தது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, பாடகர்கள், இசைக் கலைஞர்களின் ஒத்துழைப்பால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இசைக்கு மொழி கிடையாது. எனக்கு கன்னடம் சரளமாகப் பேசத் தெரியாது என்றாலும், இசையை புரிந்துகொண்டு பாடல் கொடுத்துள்ளேன். நடிகர் ராஜ்குமாரின் படங்களுக்கும் நான் இசை அமைத்துள்ளேன். கன்னட மக்களின் அன்பால், ஆதரவால் பல கன்னடப் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது' என்றார்.

நவம்பர் 17: கமல் 60 விழாவைச் சிறப்பித்த இளையராஜா இசை நிகழ்ச்சி

நடிகர் கமல் ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா நடத்திய இந்த நிகழ்ச்சியில் கமலின் முக்கியத் திரைப்பாடல்கள் இடம் பெற்றன. 

நவம்பர் 23: இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் ஒன்று கூடுங்கள்: பாரதிராஜா கோரிக்கை

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு கட்டடத்தைப் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக அந்தக் கட்டடம் தொடர்பாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவின் நிர்வாகத்துக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இளையராஜாவின் நீண்டகால நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களைத் தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வாகும். ஆகையால் அவர் மீண்டும் இசைப்பணிகளை அங்குத் தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் நவம்பர் 28 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்று கூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

நவம்பர் 18: சைக்கோ படம்: இளையராஜா இசையமைப்பில் முதல் பாடல் வெளியானது

இப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். இளையராஜா + சித் ஸ்ரீராம் கூட்டணி மிகவும் புதுமையாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

நவம்பர் 28: கால அவகாசம் அளிக்க வேண்டும்: இளையராஜாவுக்காக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் பாரதிராஜா கோரிக்கை!

இளையராஜாவின் இசை அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறாா். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிா்வாகம். இளையராஜா தனது அத்தனை படங்களுக்கும் அங்குதான் இசை அமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தாா். இப்போது ஸ்டூடியோ வருமானம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்கே அமைந்துள்ள பல ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் வரும் வருமானத்தை பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் அங்கே இப்போது இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரசாத் ஸ்டூடியோவில் திரையுலகினா் ஒன்று கூடினார்கள். அவர்கள் பிரசாத் ஸ்டூடியோ நிா்வாகத்தினரைச் சந்தித்துப் பேசினார்கள். பிறகு, செய்தியாளர்களிடம் பாரதிராஜா கூறியதாவது:

பிரசாத் ஸ்டூடியோவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா பணி செய்து வந்தார். இதனால் இரு தரப்புக்கும் மரியாதை ஏற்பட்டது. தற்போது திடீரென இடத்தைக் காலி செய்யுங்கள் என்று இளையராஜாவிடம் சொல்லிவிட்டார்கள். இந்த இடத்தை செண்டிமெண்டாகக் கருதும் ராஜாவுக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டது. யாருக்கும் பாதகம் இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடிக்க வேண்டும். கால அவகாசம் தந்து அதுவரை இளையராஜாவைப் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் சார்பில் பிரசாத் ஸ்டூடியோவிடம் அறிக்கை கொடுத்துள்ளோம். அதற்குள் நாங்களே ராஜாவுக்கு வேறு ஏற்பாடு செய்வோம். இன்று பொறுப்பு நிர்வாகிகளிடம் பேசினோம். இன்னொரு முறை அழைத்துப் பேச அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இளையராஜாவுக்கு ஆதரவு அளித்த ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் நன்றி. நாங்கள் இவ்வளவு பேர் பேசியதற்கு இளையராஜா தலைவணங்குவார் என்று கூறினார்.

நவம்பர் 27; கோவா பட விழாவில் அசத்திய இளையராஜா

50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில் இளையராஜாவுடனான இயக்குனர் பால்கியின் கலந்துரையாடல் நடைபெற்றது. மேடையிலேயே ஒரு பாட்டுக்கு இசையமைத்தார் இளையராஜா. 

"தன் தந்தையைக் கொல்வதற்காக சென்று கொண்டிருக்கும் மகன்..." என்று தொடங்கி பாடலுக்கான சூழலை விளக்கினார் பால்கி. ஒரு கணம் ஆழ்ந்து சிந்தித்தபின், பார்வையாளர்களிடம் அமைதி காக்க உறுதி வாங்கிக்கொண்டு, பாடலுக்கான நோட்ஸை எழுத ஆரம்பித்தார் ராஜா. அவர்களும் சொன்னபடியே அமைதி காத்தார்கள், அவ்வப்போது இருமல்களால் அந்த அமைதியை உடைத்தபடியே. "இந்தப் பாடலுக்கு இசையமைக்க, பெரும்பாலானவர்கள் இரண்டு நாள்களாவது எடுத்துக் கொள்வார்கள்," என்றார் பால்கி. 

சில நிமிடங்களில் பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதி முடித்த ராஜா, இசைக்குறிப்புகள் அடங்கிய தாளை வயலின் கலைஞரிடம் வழங்கினார். "இப்போதெல்லாம் இதைப்போல ஒரு பாடலுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர்கள் மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்" என்று அவர் சொல்ல, அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்தப் பாடலுக்கு இசையமைக்க, புல்லாங்குழல் வாசிப்பவர் உள்பட அனைத்து இசைக்கலைஞர்களின் பங்கிருந்தது. இரண்டு நிமிடங்களில் பிறந்த பாடல் போலத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட தாலாட்டு போலிருந்தது. அதைப்பற்றி அவரிடம் கேட்க, "நான் ஏன் இதைத் தாலாட்டைப் போல இசையமைத்தேன் என்றால், சாகப்போகும் ஒரு தந்தையைப் பற்றியது இது. கண்டிப்பாக தன்னைக் கொல்ல வரும் தன் மகனுக்கு முன்னொரு காலத்தில் அவர் தாலாட்டு பாடியிருப்பார்" என்று அனைவரும் பிரமிக்கும் வகையில் விளக்கமளித்தார் ராஜா.

டிசம்பர் 3: இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ பிரச்னை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையிலான பிரச்னை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளேன். வாடகை கொடுக்கத் தயாராக உள்ளேன். இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாகப் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று இளையராஜா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 12: கார்ப்பரேட் நிறுவன விளம்பரத்துக்கு இசையமைத்த இளையராஜா

கடந்த 40 வருடங்களில் முதல் முதலாக கார்ப்பரேட் விளம்பர நிறுவனத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படி ஓர் அறிவிப்புடன் கோக்கோ கோலா பெவரேஜ் நிறுவனம் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது. இந்த இசை உருவாக்கத்தின் விடியோவையும் வெளியிட்டது.

டிசம்பர் 20: இளையராஜா கேக்!

இளையராஜாவைப் பெருமைப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் அவரது உருவத்தில் ஐந்தரை அடி உயர கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமாா் 50 கிலோ எடையில் ஜிப்பா, வேட்டி, துளசி மாலை அணிந்து இருப்பது போல ஐந்தரை அடி உயரமுள்ள இளையராஜாவின் உருவம் வடிவமைக்கப்பட்டு கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை 5 பணியாளா்கள், 50 கிலோ எடையுள்ள இனிப்புகள் மற்றும் 250 முட்டைகளைப் பயன்படுத்தி சுமாா் 6 நாள்களாக உருவாக்கியுள்ளதாக கடை உரிமையாளா் சுப்பு சதீஸ் தெரிவித்தாா். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையின் அடிப்படையில் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

டிசம்பர் 28: இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது

இசைக் கலைஞா்களுக்கு கேரள அரசு சாா்பில் வழங்கப்படும் ‘ஹரிவராசனம்’ விருது, இந்த ஆண்டு இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இசைக் கலைஞா்களை கௌரவிக்கும் நோக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ‘ஹரிவராசனம்’ விருதை கேரள அரசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, 2018-ல் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருது புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்தது.

சபரிமலை சந்நிதானத்தில் ஜனவரி மாதம் நடைபெறும் விழாவில் இந்த விருது இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று கேரள சுற்றுலாத் துறை அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படவுள்ளது.

‘ஹரிவராசனம்’ விருதை முதல் முறையாக பின்னணிப் பாடகா் கே.ஜே.யேசுதாஸ் பெற்றாா். அவருக்குப் பிறகு, பின்னணிப் பாடகா்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமாா், கங்கை அமரன், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோா் இவ்விருதைப் பெற்றுள்ளார்கள்.

டிசம்பர் 30: இளையராஜா இசையமைத்த தமிழரசன் பாடல்கள் வெளியீடு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் - தமிழரசன். இயக்கம் - பாபு யோகேஸ்வரன். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜனவரி 15, 2020: இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கேரள அரசு கௌரவிப்பு

இசைக் கலைஞா்களுக்கு கேரள அரசு சாா்பில் வழங்கப்படும் ‘ஹரிவராசனம்’ விருது, இந்த ஆண்டு இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

சபரிமலை சந்நிதான வளாகத்தில் காலையில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினை இளையராஜாவுக்குக் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வழங்கினார். விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

காலையில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த இளையராஜா, விழாவில் தாம் இசையமைத்த இரு ஐயப்பன் பாடல்களையும் பாடினார்.

இசைக் கலைஞா்களை கௌரவிக்கும் நோக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ‘ஹரிவராசனம்’ விருதை கேரள அரசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, 2018-ல் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருது புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்தது.

‘ஹரிவராசனம்’ விருதை முதல் முறையாக பின்னணிப் பாடகா் கே.ஜே.யேசுதாஸ் பெற்றாா். அவருக்குப் பிறகு, பின்னணிப் பாடகா்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமாா், கங்கை அமரன், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோா் இவ்விருதைப் பெற்றுள்ளார்கள்.

பிப்ரவரி 28: இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்னையை 2 வாரங்களில் உரிமையியல் நீதிமன்றம்  முடிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளேன். வாடகை கொடுக்கத் தயாராக உள்ளேன். இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாகப் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இளையராஜா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்னையை 2 வாரங்களில் உரிமையியல் நீதிமன்றம்  முடிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 6: இசை எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என இளையராஜா பெருமிதம்!

மார்ச் 14 -ஆம் தேதி மலேசியா சுற்றுலாத் துறை சாா்பில் மலேசிய சா்வதேச வா்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் இசையமைப்பாளா் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறுவதற்காக சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளா்கள் சந்திப்பில் இளையராஜா பேசியதாவது:

என்னுடைய இசை உங்களுக்கெல்லாம் கிடைத்தது பரிசு என சொல்கிறீர்கள். என்னுடைய இசை எனக்கு கிடைத்ததே பரிசு. இந்த உடல் எப்படி வந்தது என நமக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேகத்தோடு இந்த உலகத்துக்கு வருகிறோம். ஒவ்வொரு துறையில் நுணுக்கம் பெற்றவர்களாக ஆகிறோம். இப்படி இறைவன் எல்லா விஷயங்களையும் கொடுத்திருக்கிறான் என்பது அதிசயம். அந்த வகையில் இறைவன் எனக்கு இசையை கொடுத்தது எவ்வளவு பெரிய பரிசு. ஒரு பாடலை நீங்கள் கேட்கிறீர்கள். நான் இசையமைக்கவில்லை என்றால் அப்பாடலே இல்லை. அதுதான் இங்கே முக்கியம். என்னுடைய இசை நிகழ்ச்சி மலேசியா சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்பதை நினைக்கும்போது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

மார்ச் 13: இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்துள்ளார் விஷால்.

இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார்.

மே 5: லிடியனைப் பாராட்டிய இளையராஜா: தந்தை குஷி!

இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவருடைய சகோதரியைப் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டியுள்ளதாக அவருடைய தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎஸ் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார் சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றார்.

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில்  நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல  நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும் இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வியைப் பயின்று வருகிறார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார்.

அடுத்ததாக, இசையமைப்பாளராகவும் ஆகியுள்ளார் லிடியன். பிரபல மலையாள நடிகர் மோகன் லால் இயக்கும் Barroz என்கிற 3டி படத்துக்கு இசையமைக்கிறார் லிடியன்.

இந்நிலையில் லிடியன் மற்றும் அவருடைய சகோதரியைத் தொலைப்பேசி வழியாக இளையராஜா பாராட்டியுள்ளதாக லிடியனின் தந்தை சதீஷ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

கடந்த 25 ஆண்டுகளாக என் இசை வாழ்க்கையை இளையராஜாவுக்கு அர்ப்பணிப்பு செய்து வருகிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அவருடைய இசையைப் பழகியும் பாடல்களைப் பாடியும் வருகிறேன்.

25 ஆண்டு கால தவத்தின் பயனை ஒரு தொலைப்பேசி அழைப்பில் அடைந்தேன். இசைஞானியிடமிருந்து வந்த விடியோ அழைப்பு இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

என் குழந்தைகளின் திறமையைப் பாராட்டவே அவர் அழைத்தார். அதற்காக எங்களை நேரடியாக அவர் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஆனால் அழைத்தாரே! இசை விடியோக்கள், பதிவுகளைப் பார்த்து அழைத்துள்ளார். இன்னும் பெரிய அளவில் உயர வேண்டும் என அவர் வாழ்த்தினார். அந்த அழைப்பில் தாய் போன்ற பாசத்தையும் குழந்தை போன்ற சிரிப்பையும் கண்டேன். தரிசனம் கிடைத்தது, பயனும் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

மே 19: இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி முதல் அவருடன் இணைந்து பணியாற்றிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

இரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இளையராஜாவின் இசைக்குழுவில் டிரம்மராகவும் இசை மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜி.கே. வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றியபோது இளையராஜாவுக்கு அறிமுகமான புருஷோத்தமன், அன்னக்கிளி படம் முதல் ராஜாவுடன் இணைந்து பணியாற்றி, ராஜாவின் ஆஸ்தான கலைஞர் என்று பெயர் பெற்றவர். இளையராஜாவுடன் இணைவதற்கு முன்பு திவாகர், கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். நிழல்கள் படத்தில் மடை திறந்து பாடலில் டிரம்மராக நடித்துள்ளார் புருஷோத்தமன்.

இளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் இசைக் கலைஞராக உள்ளவரும் பாடகருமான அருண்மொழி, புருஷோத்தமனின் மறைவு குறித்து கூறியதாவது:

தாங்கள் மறைந்துபோனாலும் தங்களின் இதயத் துடிப்பைத் தாளங்களாக்கி எத்தனை எத்தனை விதங்களில், கிட்டத்தட்ட இசைஞானியின் எல்லாப் பாடல்களிலும் முத்திரை பதித்துவிட்டே இறையடி பயணித்திருக்கிறீர்கள்.

ஒரு முறை துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் இசைஞானி தங்களை அறிமுகம் செய்கையில் தாங்கள் அன்னக்கிளி தொடங்கி இன்றுவரை உடன் பயணித்துக்கொண்டிருப்பவர் என்பதைச் சொல்லி, தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து கடினமாய் உழைப்பவர் என்று சிலாகித்ததை நினைவு கொள்கிறேன். எனக்குத் தெரிந்து வேறு யாரையும் இது போல இசைஞானி சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.

தாங்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை தங்கள் நாதம் எங்கோ ஓரிடத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று எழுதியுள்ளார்.


மே 23: ஒருமுறை, என் மனைவியை புரு என அழைத்து விட்டேன்: இசைக்கலைஞர் புருஷோத்தமன் மறைவுக்கு இளையராஜா வேதனை (விடியோ)

இசைக்கலைஞர் புருஷோத்தமனின் மறைவுக்கு இளையராஜா விடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடன் வாழ்நாளிலே என் அருகிலே அதிக நாள் இருந்து, மற்றவர்கள் எல்லோரையும் விட, எங்களுடைய குடும்பத்தாருடன் இருந்ததை விட நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரம் தான் அதிகம். நேரம் என்றால் நேரம் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இசையிலேயே கழிந்த நேரம் அத்தனையும் நாங்கள் ஒன்றாக இருந்ததுதான்.

எந்த நேரம் அழைத்தாலும் அந்த நேரம் என் அருகில் அமர்ந்து அல்லது அவர் அருகிலே நான் அமர்ந்து இசையமைக்கின்ற நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன. என் வாழ்க்கையில் என் குடும்பத்தாருடன் கூட அவ்வளவு நேரம் இருந்தது கிடையாது. வீட்டில் ஒருமுறை என் மனைவியை அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக புரு என்று சொல்லி அழைத்துவிட்டேன். அவ்வளவு தூரம் நெருக்கமாக இருந்த புருஷோத்தமன் காலமானது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வை இவ்வளவு சீக்கிரம் நான் எதிர்பார்க்கவில்லை. இறைவன் விரைவாகவே அவரை அழைத்துக்கொண்டுவிட்டான். சகோதரர் சந்திரசேகர் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

மே 29: கரோனா கள வீரா்களை பாராட்டி இளையராஜா பாடல்

கரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், களத்தில் நின்று போராடுபவா்களைப் பாராட்டி இளையராஜா பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளாா்.

கரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா், ஊடகத்தினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் மட்டுமே அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களின் சேவையைப் போற்றுவது, அவா்களுக்கு உதவுவது என பலரும் முன் வருகின்றனா். கரோனா களவீரா்களுக்காக பல்வேறு இசையமைப்பாளா்கள், பாடகா்கள் பாடல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனா். தற்போது இளையராஜாவும் கரோனா போா் வீரா்களுக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்தது மட்டுமன்றி பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளாா். இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளாா். பியானோ, கீ போா்டு உள்ளிட்ட வாத்தியங்களின் இசையை இளையராஜாவின் மேற்பாா்வையில் லிடியன் செய்துள்ளாா். அவருடைய தந்தை பின்னணிக் குரல் கொடுத்துள்ள நிலையில் அமிர்தவர்ஷினி வயலின், புல்லாங்குழல் வாசித்துள்ளார். ‘பாரத பூமி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளாா் இளையராஜா.

மேலும், ஹிந்திப் பாடலைப் பாடியுள்ளாா் சாந்தனு முகா்ஜி. இந்தப் பாடலை குடியரசு துணைத் தலைவா் உள்ளிட்ட பலா் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் பகிா்ந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com