கிராமப்புறங்களில் 35 சதவீத வாக்குகள்தான் போடப்பட்டுள்ளன என்று செய்தி வெளியாயிற்று.
ஆனால், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பெருவாரியாகச் சென்று வாக்களித்தனர் என்றும், மட்டக்களப்பில் 80 சதவீதம், திருகோணமலையில் 53 சதவீதம், அம்பாறையில் 55 சதவீதம் மக்கள் வாக்களித்தனர் என்றும் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது.
""தேர்தலில் பெருவாரியாக மக்கள் வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். விடுதலைப் புலிகளின் வன்முறைப் பாதையை முற்றாக நிராகரித்துவிட்டார்கள்'' என்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அமைதிப்படை பிரசாரம் செய்ய ஆரம்பித்தது.
மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகளின்படி 1,72,536 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 77 வாக்குச் சாவடிகள்தான் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி ஒரு வாக்குச் சாவடியில் சராசரி 2,240 வாக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
தேர்தல் வாக்களிப்பு காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை (ஒன்பது மணி நேரம்) நடைபெற்றது.
பெரும்பாலான வாக்காளர்கள் காலை 10 மணிக்கு மேல்தான் தாம் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடி எது என்பதை அறிந்து அங்கு செல்ல முடிந்தது. 2,240 பேர் வாக்களிப்பதற்கு 7 மணியிலிருந்து இடைவிடாது வாக்களிப்பு நடைபெற்று, நிமிடத்துக்கு 4 வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். எந்த வகையிலும் இது சாத்தியமானதல்ல.
மட்டக்களப்பு மாவட்டத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மூன்று கட்சிகளின் சின்னங்களையும் நாற்பத்திரண்டு வேட்பாளர்களின் பெயர்களையும் கொண்டிருந்தது. சுமார் ஒன்றரை அடி நீளமானது. அந்த வாக்குச்சீட்டில், வாக்காளர்கள், முதலில் தாம் விரும்பிய கட்சிக்கு, கட்சியின் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதன் பின்னர் 42 பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து தாம் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
பிறகு, இரண்டாவதாக விரும்பும் மாற்று வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். அதன்பின் ஒன்றரை அடி நீளமான அந்த வாக்குச்சீட்டைக் குறைந்த பட்சம் நான்காக மடித்து வாக்குப் பெட்டிக்குள் போடவேண்டும். இவற்றுக்கு மட்டும் குறைந்தபட்சம் 30 வினாடிகளாவது தேவைப்படும்.
அது தவிர, வாக்காளர்களுக்கு முன்கூட்டியே வாக்காளர் அட்டைகள் வழங்கப்படாததால் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்துப் பின்னர் வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு, கை விரலுக்கு மை பூசிக்கொண்டு வாக்களிக்கத் தயாராகக் குறைந்தபட்சம் 45 வினாடிகளாவது தேவை.
வாக்காளர் அட்டை கிடைக்காத ஒருவர் தன்னுடைய வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று, தன் பெயரையும் வசிப்பிடத்தையும் கூறினால் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை வழங்குபவர் தாம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து உறுதி செய்ததன் பின்புதான் வாக்குச் சீட்டை வழங்குவார். சராசரி 2,000 பேர் கொண்ட வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர் பெயரைக் கண்டுபிடிக்கப் பல நிமிடங்கள் ஆகும்.
""வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கையில் கிடைக்காததால் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பது என்று தெரியாமல் ஒவ்வொரு வாக்குச் சாவடியாகச் சென்று பார்த்து, அங்குள்ள வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இருக்கிறதா என்று அவர்கள் பார்க்க வேண்டியிருந்தது'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ரீட்டா செபஸ்தியான் தெரிவித்துள்ளார். (20.11.88-இந்தியன் எக்ஸ்பிரஸ்)
எப்படிப் பார்த்தாலும், இயந்திரகதியில் இயங்கினாலும் கூட ஆக, குறைந்தபட்சம் ஒரு வாக்கைப் போடுவதற்கு ஒரு நிமிடத்துக்கும் அதிகமாகத் தேவை.
அப்படி இயந்திரகதியில் வாக்களித்தாலும் கூட மட்டக்களப்பில் உள்ள 77 வாக்குச் சாவடிகளிலும் அதிகபட்சம் 41,580 வாக்குகள்தான் போடப்பட்டிருக்க முடியும் என்பது விடுதலைப் புலிகளின் வாதமாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் வெளியீட்டில் மேலும் கூறுவதாவது: கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் தரும் புள்ளி விவரங்களின்படி 15 வினாடிக்கு ஒரு வாக்கு போடப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்குச் சாவடிக்கு 2,240 வாக்காளர் என்பது சராசரிதான். வாக்குச் சாவடிகள் அனைத்திலும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இல்லை. சில வாக்குச் சாவடிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளும் சில வாக்குச் சாவடிகளில் 3,000-க்கும் அதிகமான வாக்குகளும் இருந்திருக்கின்றன.
எனவே, வாக்காளர்கள் எண்ணிக்கை சராசரிக்கு அதிகமாகவுள்ள வாக்குச் சாவடிகளில், வாக்களிப்பு வேகம் 1 வாக்குக்கு 10 வினாடிகளாவது இருந்திருக்க வேண்டும்.
கை விரலுக்கு மை பூசாமல், வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளாமல் வாக்குச் சீட்டுகளை டேபிளில் மொத்தமாக அடுக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்து ஒரு ஆள் வேகம் வேகமாக வாக்குச் சீட்டை அடையாளமிட்டு மடித்துப் பெட்டியில் போடுவதானாலும் 10 வினாடிக்கு மேல் தேவை.
தேர்தலைப் பார்வையிட இந்திய அரசு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு ஏற்கெனவே "செட்டப்' செய்யப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு போடப்பட்ட விகிதத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அங்குகூட நிமிடத்துக்கு 2 வாக்குகள்கூட போடப்படவில்லை.
இந்திய அரசு அதிகாரிகளினால் வாக்களிப்பைப் பார்வையிட கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ரீட்டா செபஸ்தியான் கூற்றுப்படி, திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் காலை 7 மணி முதல் 11.20 வரை 500 வாக்குகள்தான் போடப்பட்டிருந்தன. அதாவது, ஒரு நிமிடத்துக்கு 2 (260 நிமிடத்துக்கு 500) வாக்குகள்கூடப் போடப்படவில்லை. ஒரு வாக்களிக்க (260/500-.52 நிமிடம்) 30.3 வினாடிகள் எடுத்திருக்கிறது.
மட்டக்களப்பில் கொண்டாவில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் மாலை 3.10 மணி வரை 1,100 வாக்குகள் போடப்பட்டிருந்தன. அதாவது 490 நிமிடங்களில் 1,100 வாக்குகள் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (490/1, 100-.45 நிமிடங்கள்) 27 வினாடிகள் ஆகியிருக்கின்றது.
இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்ட வீரகேசரி பத்திரிகை நிருபர் எஸ்.என்.பிள்ளை எழுதியிருப்பதன்படி, மட்டக்களப்பு உப்போடை வாக்குச் சாவடியில் மாலை 2.30 மணி வரை 860 வாக்குகள் போடப்பட்டிருந்தன. அதாவது 450 நிமிடங்களில் 860 வாக்குகள் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (450/860-.52 நிமிடங்கள்) 31.2 வினாடிகள் ஆகியிருக்கின்றது.
மட்டக்களப்பு, புத்தூர், விக்னேஸ்வரா வித்யாலய வாக்களிப்பு நிலையத்தில் பகல் 12 மணி வரை 205 வாக்குகள் மட்டும்தான் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (300/205-1.46 நிமிடங்கள்) 87 வினாடிகள் எடுத்திருக்கின்றது.
மக்கள் ஆர்வமாக பெருவாரியாக வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்திய அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று காட்டப்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே ஒரு வாக்களிக்க 87 வினாடி, 31 வினாடி, 30 வினாடி என ஆகியிருக்கிறது என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
10 முதல் 15 வினாடிக்குள் ஒவ்வொரு வாக்கும் இடைவிடாது போடப்பட்டிருந்தால்தான் தேர்தல் முடிவுகளில் அறிவிக்கப்பட்ட 1,72,536 வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போடப்பட்டிருக்க முடியும். எந்த விதத்திலும் அது சாத்தியமில்லை.
மேற்படி தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய மக்கள் அளித்துள்ள வாக்குகள் பற்றிய முடிவுகளின்படி-
மட்டக்களப்பு மாவட்டத்தில்....
வெற்றி பெற்ற ஈபிஆர்எல்எஃப்-க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 2,78,179 (99.7%)
வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 639 (.22%)
73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்த வாக்குகள் வீதம் -99.7%
24.4 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் வீதம் -22%.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப்-க்கு வேட்பாளர்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளில் 99.7 சதவீதம் கிடைத்திருக்கும். அதே நேரம், 24.4 சதவீத வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக (0.22) கால் சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
ஈபிஆர்எல்எஃப் வேட்பாளர்களின் வாக்குகள் முழுக்க முழுக்க போடப்பட்டிருக்கிறது. அதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகள் போடப்படவில்லை.
நாளை: ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரசின் நிலைப்பாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


