நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூடங்குளம்: அச்சமா, ஆதாயமா?

கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அங்கிருந்து சாமர்த்தியமாக தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டது கூடங்குளம் அணுமின் திட்டம். இதை முளையிலேயே கிள

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:12 pm

வே.சுந்தரேஸ்வரன்

கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அங்கிருந்து சாமர்த்தியமாக தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டது கூடங்குளம் அணுமின் திட்டம். இதை முளையிலேயே கிள்ளி எறியாமல் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து செயல்பாட்டுக்கு வரும்போது ஞானோதயம் ஏற்பட்டு சிலர் தடுக்க நினைப்பதுதான் உள்நோக்கம் கொண்டதாக நடுநிலையாளர்களை நினைக்க வைக்கிறது.

மின் உற்பத்தி எப்படி நாட்டுக்கு அவசியத் தேவையோ, அதேபோன்று மக்களின் பாதுகாப்பும் அவசியம் என்பதை 120 கோடி மக்கள் உள்ள ஒரு பெரிய தேசத்தின் ஆட்சியாளர்களுக்கு எப்படித் தெரியாமல் போகும்?

ஆக, கூடங்குளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அணு மின் நிலையக் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு தீவிரப் போராட்டத்தில் ஈடுபடத் துணியாத, அதற்காக தங்கள் பதவியைத் துறக்க முன்வராத, கொள்கையாகக் கொண்டு போராடாத, தங்களையே அர்ப்பணிக்காத முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது இப் பிரச்னையில் திடீரென ஆர்வம் காட்டுவது ஏன்?

பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை, மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்து விஷயம் என்று கூறுவோர் இந்தத் திட்டத்தைத் தொடக்கத்திலேயே தடுக்க முன்வராமல் போனது ஏன்?

நம்முடைய தன்மானத் தமிழகத் தலைவர்கள் இத் திட்டத்தை பல ஆண்டு காலம் அவகாசம் இருந்தும் நிறுத்துவதற்கு ஏன் கடுமையாகப் போராடவில்லை?

அணு உலை குறித்த விழிப்புணர்வு அப்பாவி மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், படித்த அரசியல் தலைவர்களுக்கும், அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கும் கூடவா தெரியவில்லை? பிறகு ஏன் இந்த அணு உலை கட்டப்பட்டது? மின் தேவை ஒருபுறம் இருக்கட்டும். வேறு பல பாதுகாப்பு விஷயங்களும்கூட அல்லவா இதில் அடங்கியிருக்கிறது.

சுனாமிப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், புவி அதிர்ச்சிக்குள்ளாகும் பகுதிகள் எவையென்று தெரிந்திருந்தும் கடற்கரைப் பகுதிகளில் வாழாமலோ, அங்கெல்லாம் போகாமலோ யாராவது இருந்து விடுகிறார்களா?

நாட்டின் வளர்ச்சி, தேவைக்கான முக்கியத் திட்டங்களிலும் இதேபோன்ற மனோபாவம் அவசியம் என்பது விஞ்ஞானத்தைத் ஆதரிப்போர் கூறுவதும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்த அணு உலைகள் போன்ற திட்டங்கள் தேவையில்லை என்று சமூக ஆர்வலர்கள் பரஸ்பரம் கூறுவதும் சம்பிரதாயமாகி விட்டன. கூடங்குளம் அணு மின் திட்ட விஷயத்தைப் பொறுத்தவரை இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை என்பதைத் தவிர வேறு என்னவென்பது?

இதனிடையே, கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்களுக்கும், அரசியல், தன்னார்வ அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சந்தேகங்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் இந்த அணு உலை பாதுகாப்பானவை என்று விஞ்ஞானியான அப்துல் கலாம் கூறியிருக்கிறார்.

சுனாமி காரணமாக ஜப்பான் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து, அணு உலை விபத்து காரணமாக கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் நுரையீரல் புற்று ஏற்படும் அச்சம், அணுசக்தி கழிவு சேமிப்பால் ஏற்படும் ஆபத்து, கழிவுகள் கடலில் கலந்தால் உயிரினச்சூழல் - மீன் வளம் பாதிக்கப்படும் என்கிற அச்சம், கடற்கரையோர மக்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிப்பது போன்ற சந்தேகங்களுக்குத் தீர்வு அளிக்கும் விதமாக 10 அம்சத் திட்டத்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

""முடியாது - ஆபத்து - பயம் கொண்டவர்களின் உபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது'' என்ற அவரது வார்த்தைகளும் நம்பிக்கை விதைகளை விதைப்பதாக உள்ளன.

இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்ற அக்கறை கொண்ட மனிதராக மக்களால் நினைக்கப்படும் கலாம், இப்பிரச்னையில் உண்மையையே உரைப்பார் என்பது நல்லோர்களின் நம்பிக்கை.

இந்தப் பிரச்னை பெரிய அளவில் பிரச்னைக்கு உரியதாக ஆக்கப்பட்டுள்ளதால், அணு உலைப் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்துவதற்கு வழியேற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி தமிழகத்திற்குக் கிடைக்கும் அணு மின் சக்தி அளவை அதிகரிக்க முயல வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் கல்பாக்கத்தில் கட்டப்பட்ட அணு உலையால் இதுவரை பாதுகாப்பு விஷயத்தில் எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை என்பதை அணு சக்திக் கழகத்தினர் தனக்கான சாதக வாதமாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு.

தவிர, 13 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்து அணுஉலை கட்டப்பட்ட பிறகு, அது தேவைதானா என்று குரல் எழுப்புவதும் பாதுகாப்பு விஷயத்தைக் கையில் தூக்கிப் பிடிப்பதும் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் ஆதாயம் தேடுவோருக்கும் நல்லதாக இருக்கலாம். ஆனால், ஏதும் அறியாத அப்பாவி மக்களுக்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.