விவசாய விமோசனம்


ஓரு காலகட்டத்தில் விவசாயம் சுமார் 75 சதவிகித மக்களின் வாழ்நிலையைக் காப்பாற்றி வந்தது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பெற்ற நகர்ப்புற வளர்ச்சியால் விவசாயத்தை மட்டும் நம்பிவந்த மக்கள் மாற்றுத் தொழில்களை மேற்கொண்டுவிட்டதால் 2010-11 புள்ளிவிவரங்களின்படி இன்று சுமார் 50 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.
ஒட்டுமொத்த ஜி.டி.பி. வருமானக் கணக்கில் விவசாயத்தின் பங்கு 14.5 சதவிகிதம் மட்டுமே. இந்திய ஏற்றுமதியில் 10.5 சதவிகிதம் வரை விவசாயம் பங்கேற்று வருகிறது. ஒரு பக்கம் விவசாயம் அழிந்து கொண்டிருந்தாலும் விவசாய விளைபொருள்களின் தேவை பெருகியவண்ணம் உள்ளது.
தொழில் வளர்ந்தால் போதுமா? ஒவ்வொரு மனிதனுக்கும் வயிறு நிறைய உணவு வேண்டுமே? உணவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் விர்ரென்று விலைவாசி ஏறும். விலைவாசி ஏறினால் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ரத்த அழுத்தம் ஏறி, "வட்டியை உயர்த்துவேன்' என்று பயமுறுத்துவார். வட்டியை உயர்த்தினால் தொழில்துறை கலகலத்துப் போகும். இப்போது உணவு விலை ஏற்றம் காய்கறி - பழங்கள், பருப்பு, புரத உணவுகளான முட்டை - இறைச்சிகளில் ஏற்பட்டு உணவு விலைப் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. அரிசி - கோதுமை விலை ஏற்றத்தால் அல்ல.
விவசாய விளைபொருள்களின் தேவை உணவில் மட்டுமல்ல; ஏற்றுமதி மற்றும் உணவுசார்ந்த தொழில்துறைக்குரிய கச்சாப்பொருள்களின் வழங்கலாகவும் விவசாயம் உள்ளது. மருத்துவத்துறைக்குரிய மூலிகைகளையும் விவசாயம் வழங்குகிறது.
எவ்வளவுதான் ஓர் அரசு விவசாயத்தைப் புறக்கணித்தாலும்கூட, இந்திய விவசாயத்தை அழிப்பதற்காகவும், அரசுத்துறை மூலதனங்களைத் தனியார்களுக்குத் தாரை வார்க்கவும், சில்லறை விற்பனையை வால்மார்ட்டுக்கு வழங்கவும் எத்தனை ரகுராமன் ராஜன் போன்ற அமெரிக்க - இந்தியப் பொருளாதார நிபுணர்கள் சிகாகோவிலிருந்து வந்தாலும்கூட, விவசாயத்தை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது.
"ஒபாமாவின் கையாள்' ஒருவர் பிரதமரின் பொருளாதாரச் செயலராக நியமிக்கப்பட்டதன் எதிரொலியை நாடாளுமன்ற நடவடிக்கைகள் பிரதிபலித்துள்ளன. சில்லறை வர்த்தகம் பற்றியும், அரசுத்துறை மூலதனம் பற்றியும் அண்மையில் சிதம்பரமும் மன்மோகனும் பேசியுள்ளதை நினைத்துப் பார்த்தால், "பின்புலம்' என்னவென்று புரியும். எல்லா எதிர்ப்புகளையும் மீறி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்டது.
இந்திய விவசாயம் சித்திரவதைகளுக்குள்ளாகிவிட்டதை விவசாயிகளின் தற்கொலை வளர்ச்சி எடுத்துக்காட்டினாலும், இந்திய விவசாயம் விமோசனம் பெறும் மார்க்கத்தைப் பற்றி நாம் யோசிப்பது நன்று.
விவசாயத்தில் இதுநாள்வரை நாம் கடைப்பிடித்து வந்த கொள்கையில் அரசு கொள்முதல் - வினியோகத்திட்டம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. குறைந்தபட்ச விலையைச் சற்று அதிகபட்ச விலையாக மாற்றி - நெல், கோதுமை, கரும்பு ஆகிய மூன்று பயிர்களுக்கு மட்டுமே அரசுப்பணம் விரயமாகியுள்ளது. மொத்த ஜி.டி.பி. வருமான மதிப்பில் சுமார் 25 சதவிகிதம் விவசாயத்துக்குச் செலவானதில் மேற்கூறிய மூன்று பயிர்களுக்கு மட்டுமே காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயத்துக்கு என்று செலவழித்த பணம் விவசாயிகளுக்குச் செல்லாத வகையில் விவசாய உணவு மானியம் திசைமாறிச் சென்றுள்ளது. இருப்பினும்கூட குறிப்பாக அரிசிக்காகவும் கோதுமைக்காகவும் ஒதுக்கப்பட்ட உணவு மானியத்தால் - குறைந்தபட்ச விலையின் அதிகபட்ச உயர்வு காரணமாக நமது தேவைக்கு மேலாகவே பல லட்சம் டன்கள் கோதுமையும் நெல்லும் உணவு மானியத்துடன் ஆதரவு விலை கொடுத்துக் கொள்முதல் செய்து வாங்கியதெல்லாம் கொட்டிவைக்க இடமில்லாமல் குப்பையில் கொட்டப்படுவதைத் தடுக்க முடியுமா?
சமயங்களில் தொலைநோக்கு இல்லாத சில நல்ல கொள்கைகள் பயனற்றுப் போவதற்குரிய உதாரணம் இது. ஒவ்வோராண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகபட்ச உயர்வு பிளஸ் போனஸ் காரணத்தால் விளைவதையெல்லாம் வாங்கி வாங்கிக் குப்பையில் கொட்டும் நிலைமையைத் தொடர்ந்து அனுபவிக்கிறோம். உணவுக் கொள்முதல் உரிமையை மறைமுகமாக வால்மார்ட்டுக்கு வழங்குவதினால் பிரச்னைகள் தீராது. மாற்று வழியை யோசிக்கலாம்.
ஒரு மனிதனின் உணவுத்தேவை பற்றிய புள்ளிவிவரமே புரட்டானது. அரிசி மற்றும் கோதுமையைத் தவிர, வேறு உணவுகள் கணக்கில் வருவது இல்லை. காலம் மாறிவிட்டது. நடுத்தர மக்கள் அரிசி, கோதுமைக்காக மட்டுமே பணம் செலவழிப்பதில்லை.
பருப்பு, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இறைச்சி என்று தமக்கு வேண்டிய புரதப்பொருள், தாதுப்புக்கள், வைட்டமின்கள் பெறவும் பணம் செலவழிக்கின்றனர்.
மேற்கூறிய தேவையைக் கருத்தில்கொண்டு வழங்கப்படும் உணவு மானியம் புரத உணவுக்கும் பங்கிடப்பட வேண்டும்.
பருப்பு, பால், முட்டை, காய்கறி - பழங்கள் உற்பத்தியை உயர்த்தும் விவசாய முதலீடுகளை உயர்த்த வழி காண வேண்டும்.
பொது விநியோகத்துக்காக நெல், கோதுமை எவ்வளவு தேவையோ அவற்றை மட்டுமே கொள்முதல் செய்து, மானியப் பணத்தை மேற்படி புரத உணவு முதலீடுகளாக மாற்றும் உருப்படியான கொள்கையை வரைய வேண்டும்.
நெல், கோதுமைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகபட்ச உயர்வுடன் போனஸ் வழங்கிக் கொள்முதல் என்ற பெயரில் உணவை வாங்கிக் குப்பையில் கொட்டுவதை நிறுத்தி, அதே குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகபட்ச உயர்வைப் பருப்பு வகை தானியங்கள், கம்பு, கேழ்வரகுப் பயிர்களுக்கு வழங்கி அதற்கான சேமிப்புக் கிட்டங்கிகளையும் கட்டிக் கொள்முதல்செய்து மக்களுக்கு வினியோகம் செய்யும்போது விவசாயிகள் நெல், கோதுமையை விடுத்து மேற்படி மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துவார்கள்.
உணவுப் பயிர்களின் சாகுபடிப் பருவம் தொடங்கும்போதே நமது தேவை, சேமிப்புக் கிட்டங்கிகளின் கொள்ளளவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இவ்வளவுதான் நெல், கோதுமையில் இந்த ஆண்டுக் கொள்முதல் என்று முன்னறிவிப்பைச் செய்ய வேண்டும். அதே சமயம், உலர் தானியங்கள் மற்றும் பருப்பு வகைக் கொள்முதல் குறித்தும் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.
அதிகமான தண்ணீர்ச் செலவும், மின்சாரச் செலவும் உள்ள நெல், கோதுமை, கரும்பு மூன்றையும் அளவுடன் சாகுபடி செய்து புரதச்சத்துள்ள பருப்பு வகை சாகுபடி, கம்பு, கேழ்வரகு போன்ற தானியவகைச் சாகுபடியில் தீவிர கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.
கரும்பை எடுத்துக்கொண்டால் அதன் பயன் சர்க்கரையும், சாராயமுமே. மேற்படி நுகர்வையும் அளவிட்டு மாற்றுப்பயிர் சாகுபடிக்குத் திட்டமிடலாம்.
கரும்பு பயிராகும் இடங்களில் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யலாம்; அப்படிச் சாகுபடி செய்ததைச் சாகுபடியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களை கிராமம்தோறும் உருவாக்கிஅதன் மூலம் விற்பனை செய்யலாம். அதற்கான ஆள் பலத்தை மகாத்மா காந்தி ஊரக வேலைக்காப்புறுதித் திட்டத்துடன் இணைத்துச் செயல்படலாம்.
பால் உற்பத்தி விஷயத்தில் "ஆவின்' கொள்முதல் நிலையங்களை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கி சென்னையில் உள்ள "ஆவின்' கட்டுமானங்களை ஈரோடு, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, வேலூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட நகர்களிலும் அமைத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்று தனியார் பால் நிறுவனங்கள் அதிகமாகவும் "ஆவின்' கிளை நிறுவனங்கள் குறைந்தும் வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். கறவை மாடு வைத்துள்ள விவசாயிகளுக்கு வேண்டிய தீவனங்களையும் மலிவு விலையில் "ஆவின்' வழங்க முன்வருமானால் பால் உற்பத்தி பெருகும்.
"அமுல்' நிறுவனத்தை உருவாக்கிய குரியன் அமரராகிவிட்டார். அவர் கற்றுத்தந்த வழியில் செயல்பட்டால் தமிழ்நாட்டில் "ஆவின்', சிகரத்தைத் தொடலாம். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் "அமுல்' கூட்டுறவுப் பால் விற்பனை சங்கத்துக்கு இணையாக அரசுத்துறை செயல்படுவதை ஆவின் கருத்தில்கொண்டு பால் விநியோகத்தில் தனியார் ஆதிக்கத்தைப் போட்டி மனப்பான்மையுடன் முறியடித்துப் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி விவசாயம் விமோசனம் பெற உணவு - விவசாய மானியங்களை மட்டுமே நம்பினால் விவசாயத்தின் பொருள் ""நெல் சாகுபடியும் கோதுமை சாகுபடியும்தான்'' என்ற நிலைமைதான் எஞ்சும்.
நாம் நல்லபடி நலவாழ்வைப் பெற நம் உணவில் புரத உணவுகள் தாதுப்பு வைட்டமின்கள் தரக்கூடிய பருப்பு வகைகள், கம்பு, கேப்பை, வரகு, தினையுடன், காய்கறி, பழங்கள், பால், முட்டை, இறைச்சி என்ற எல்லா அம்சங்களிலும் உற்பத்தியை உயர்த்த வேண்டும்.
நெல், கோதுமை, கரும்பு தவிர்த்து மேற்படி இதர உணவுகளுக்கும் வேண்டிய முதலீடுகளை உயர்த்த வேண்டும். ஏற்றுமதிப் பொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். பருப்பு, சமையல் எண்ணெய் இறக்குமதிகளைப் படிப்படியாகக் குறைக்கும் அளவில் உள்ளூரில் அவற்றின் உற்பத்தியை உயர்த்தத் திட்டமிட்டால் மட்டும் போதாது.
நெல்லுக்கும், கோதுமைக்கும் வழங்கப்பட்ட அதே "பேக்கேஜ்' திட்டம், புரத உணவுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் தாராளமாக சாராயம் குடிக்கத் தமிழ்நாட்டில் "டாஸ்மாக்' கெட்ட உதாரணமாக உள்ளது.
அதுபோல் சத்துணவு - நல்லுணவு உற்பத்தியைப் பெருக்கும் நல்ல உதாரணத்தைத் தமிழ்நாடு முன்வைத்தால் மற்ற மாநிலங்கள் பின்பற்ற உதவலாம். வாழ்க பாரதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...