அடிகளாரின் அளப்பரிய தமிழ்ப்பணி

உலக அளவில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்திய பெருமைக்கு உரியவர் சேவியர் தனிநாயகம் அடிகளார் ஆவார்.

உலக அளவில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்திய பெருமைக்கு உரியவர் சேவியர் தனிநாயகம் அடிகளார் ஆவார்.

மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் 1961-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த அடிகளார் தமிழகத்தின் தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 20-07-1963 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரியர்களை ஒன்றுகூட்டி ஆண்டுதோறும் உலக அளவில் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்னும் கருத்தை அடிகளார் முன்வைத்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகமும் தமிழக அரசும் அதை ஏற்றுக்கொண்டன. ஆயினும் அத்தகைய கருத்தரங்கம் நடைபெறவில்லை.

1964-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள்முதல் 10-ஆம் நாள் வரை தில்லியில் நடைபெற்ற உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழறிஞர்களிடம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைத்துப் பணிபுரிய வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அடிகளாரும் கமில் சுவலபிலும் வலியுறுத்திப் பேசியபின் அம்மன்றம் அமைக்கப்பட்டது. அம்மன்றமே கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடங்கி எல்லா உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளையும் நடத்தி வருகிறது. கோவையில் நடைபெற்ற மாநாடு தமிழக அரசு நடத்திய முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது தமிழின் சிறப்பை ஆய்ந்தறிந்த அடிகளார், அதை உலக அரங்கில் எடுத்தோதுவது தமது தலையாய கடமை என்று உணர்ந்தார். ஆகவே 1949-1951 ஆம் ஆண்டுகளில் உலகப் பயணத்தை மேற்கொண்டு தமிழ்தூது நிகழ்த்தினார்.

அவ்வமயம் பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தமிழின் சிறப்பைப் பற்றி உரை நிகழ்த்திய அடிகளார், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஒரே ஆண்டில் இருநூறு விரிவுரைகளாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அற்புதமான ஆய்வுரைகள் ஏற்கனவே இந்திய ஆய்வில் ஈடுபட்டிருந்த பல மேனாட்டு அறிஞர்களின் கண்களைத் திறந்தன. அவர்கள் பலரைத் தமிழாய்வில் ஈடுபட ஊக்குவித்த அடிகளார், பல்வேறு மேனாட்டுப் பல்கலைகழகங்களில் தமிழ்த்துறை அமைந்திடவும் வழிவகுத்தார்.

இவ்வாறு, இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலைமையை மாற்றி பல நாடுகளிலும் தமிழாய்வு நடைபெற வழிவகுத்த பெருமை அடிகளாருக்கே உரியது. இந்திய நாகரிகத்தின் முழுமையையும் இலக்கியச் செழுமையையும் உரிய முறையில் ஆராய்ந்து அறிய வடமொழி அறிவோடு தமிழறிவும் இன்றியமையாதது என்பதை அறிஞர் உலகத்துக்கு அடிகளார் உணர்த்தினார்.

தமிழாய்வுக் கட்டுரைகளை தமிழில் மட்டுமே படைத்தால் போதாது, அவை ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டால்தான் உலக அரங்கினைச் சென்றடைய முடியும் என்பதை தம் உலகத் தமிழ்தூதுப் பயணத்தின்போது அடிகளார் உணர்ந்தார்.

இத்தேவையை நிறைவு செய்ய 1952-ஆம் ஆண்டில் ""தமிழ் கல்ச்சர்'' என்னும் ஆங்கில முத்திங்கள் இதழை அடிகளார் வெளியிடத் தொடங்கினார். இதுவே பின்னர் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்ற வழி வகுத்தது. மேனாடுகளைச் சார்ந்த தமிழ் அறிஞர்களாகிய கமில் சுவலபில், ஜீன் ஃபீலீயோசா, எ.ஆந்திரனோவ், எம்.பி.எமனோ, ஆர்னோ லேமான், எஃப்.பி.ஜே, கியூப்பர், ஜெ.ஆர்.மார், எட்கர் நோல்ட்டன், சி.ஆர்.பாக்ஸர், தாமஸ் பர்ரோ போன்ற மேனாட்டு அறிஞர்களும், இந்திய இலங்கைத் தமிழறிஞர்களும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கிவந்த இவ்விதழ், பல மேனாட்டுப் பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் இடம்பெற்ற சிறப்புக்குரியதாகும்.

தமிழ் சார்ந்த எல்லாத் துறைகளுமே தமிழ் ஆய்வுக்கு உட்பட்டவைதாம் என்பதை தம் இதழ் மூலம் அடிகளார் வலியுறுத்தி வந்தார். பிற நாட்டு இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

அவரது எம்.லிட்.. பட்ட ஆய்வேடும் திருவள்ளுவர் பற்றி அவர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும் இத்துறையில் அடிகளாரின் ஈடுபாட்டைத் தெளிவாக விளக்குகின்றன.

தமிழில் முதன் முதலாக வெளியிடப்பட்ட கார்தில்யா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற பல நூல்களை அவர் ஐரோப்பிய நூலகங்களில் ஆய்வுசெய்து கண்டுபிடித்துத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தினார்.

அவ்வாறே, 1679-ஆம் ஆண்டு அச்சிடப் பெற்ற தமிழ் - போர்த்துக்கேய அகராதியையும் கண்டுபிடித்து அதனை மறுபதிவு செய்து 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது வெளியிட்டார். அடிகளாரின் முயற்சி இல்லையெனில் முதன்முதலில் அச்சேறிய இவ்வரிய தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.

தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், பிரெஞ்ச், ஜெர்மன் ,போர்த்துக்கேயம்,

ஸ்பானிஷ் ஆகிய மொழிகளைக் கற்றிருந்த அடிகளார், அம்மொழிகளிலெல்லாம் தமிழ் மொழி பற்றி ஆய்வுரை நிகழ்த்த வல்லவராகத் திகழ்ந்தார்.

இதனாலேயே மேலை நாடுகளில் தமிழின் சிறப்பைப் பரப்பிட அடிகளாரால் இயன்றது எனலாம். தங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ் பற்றிய ஆய்வுரை நிகழ்த்துமாறு பல ஐரோப்பிய அறிஞர்கள் அடிகளாரை அழைத்துப் பயன்பெற்றனர்.

நேப்பிள்ஸ் நகரிலும் பாரிஸ் நகரிலும் அவர் பல மாதங்கள் தங்கி, சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

பேராசிரியப் பணி, ஆய்வுப்பணி, உலக அரங்கில் தமிழ்த் தூதுப்பணி, கள ஆய்வுப் பணி, ஆய்விதழ்ப் பணி, ஆசிரியப்பணி, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவி உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடைபெற வழிகோலிய பணி, மறைந்த தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்த பணி, கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு பரவியிருந்தலைக் கண்டு உணர்த்திய பணி போன்ற பல பணிகள் மூலம் தனிநாயக அடிகளார் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

(ஆகஸ்ட் 2, தனிநாயகம் அடிகளாரின் பிறந்த நாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com