ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வாழ்வு தரும் பசுக்கள்

சிறிய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆக்கபூர்வமாக வருமானமும், அதன் மூலம் நாட்டு வருமானம் - ஜி.டி.பி. என்று கூறப்படும் ஒட்டுமொத்த வருமான மதிப்பையும் உயர்த்தும் பணியைக் கறவை மாடுகள் வழங்கக்கூடியவை.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2013, 8:06 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

சிறிய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆக்கபூர்வமாக வருமானமும், அதன் மூலம் நாட்டு வருமானம் - ஜி.டி.பி. என்று கூறப்படும் ஒட்டுமொத்த வருமான மதிப்பையும் உயர்த்தும் பணியைக் கறவை மாடுகள் வழங்கக்கூடியவை.

உணவு மானியம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு என்ற போர்வையில் உறங்கிக் கொண்டே கூலி வாங்கும் குளத்து வேலைத் திட்டம் ஆகியவை ஆக்கபூர்வமானவை அல்ல. ஐ.நா. வழங்கும் ஒரு மதிப்பீட்டின்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த ஊட்ட உணவுப் பற்றாக்குறையுடனும் நோயுடனும் வாழும் மக்களில் 25 சதவீதம் இந்தியர்கள். இன்று விவசாயம் படுத்துவிட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

காரணம், விளைந்ததை விற்று, வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. மனைவி, குழந்தை குட்டிகளையும் காப்பாற்ற முடியவில்லை. அதேசமயம் கறவை மாடுகளை வைத்துள்ள விவசாயி தற்கொலை செய்து கொள்வதில்லை. காரணம், பால் விற்ற பணத்தில் பாதியை மாட்டுத் தீவனத்திற்கு வழங்கினால் போதும். ஐம்பது சதவீதம் மிச்சமாகும். வானம் பொய்த்தாலும் பசுமாடு பொய்க்காது.

எருமைகளும் பணத்தை அள்ளித்தரும். ஆனால், பசுக்களையும் எருமைகளையும் முறைப்படி வளர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் எளிய வேலைதான்.

உணவைப் பற்றி தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை வழங்கும் தகவல்களின்படி ஏழைகளாக வாழ்பவர்களின் அன்றாட உணவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக பால், மோர், நெய் என்று எடுத்துக் காட்டியுள்ளது. தானிய நுகர்வு குறைந்தும் பால் நுகர்வு கூடியும் வருவதாகவும் ஆய்வு அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது. காரணம் எதுவெனில் தானியங்களை ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோதான் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், பாலை ஒரு நாளைக்கு இரண்டு வேளை உற்பத்தி செய்ய முடியும். அதற்கு ஏழைகள் வீட்டில் கறவை மாடு வேண்டும்.

உலக வங்கி அறிக்கையில் வறுமையை ஒழிப்பதில் கறவை மாடுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வறட்சி நில மேம்பாட்டு ஆய்வுக்குழு அறிக்கையின்படி, வானம் பொய்த்துவிட்ட சூழ்நிலையில் கறவை மாடுகளை வைத்துள்ள விவ சாயிகள் குறைவான துன்பம் அனுபவிக்கிறார்கள். விவசாயம் இல்லாவிட்டாலும் கறவை மாடுகள் கைகொடுத்துக் காப்பாற்றுகின்றன.

இதனை அனுசரித்து விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கிட கடன் உதவி செய்ய வேண்டுமென்றும், கறவை மாடுகளுக்கு மானியம், குறைந்த வட்டியில் கடன் பெற நபார்டு வழிகாட்டுதல்களை மைய அரசு ஏற்று அரசு வங்கிகளுக்கு உத்தரவு இட்டுள்ளது. நடைமுறையில் நபார்டு வழிகாட்டுதல்களை எல்லா வங்கிகளும் கோப்புகளில் முடக்கியுள்ளதே தவிர செயல்படுத்தவில்லை.

விவசாயத்திற்கு என்று கடன் வாங்கினால் பஞ்சம், வெள்ளம், வறட்சி என்று தள்ளுபடி செய்ய வாய்ப்பு உண்டு. விவசாயிகளின் ஓட்டுகளைப் பெற ஐந்தாண்டுக்கு ஒரு முறை விவசாயக்கடன் தள்ளுபடியாகும் வாய்ப்பு உண்டு. கறவை மாட்டுக் கடனில் விளைச்சல் இல்லை என்று சொல்ல முடியாது. தீவனம் போட்டால் மாடு பால் கறக்கும். மழை என்று பார்க்காது. வறட்சி என்றும் பார்க்காது. பாலை விற்ற காசில் கடனைக் கட்டியே தீர வேண்டும். இல்லாவிட்டால் பசுவை ஓட்டிக்கொண்டு போய் ஏலம் போடுவார்கள். ஜப்தி நடவடிக்கை கடுமையாக இருக்கும். இப்படி வரக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க கறவை மாட்டுக் கடன் என்று கேட்டால் எந்த வங்கியும் தருவது இல்லை.

இப்போதெல்லாம் பெரிய பெரிய பால் நிறுவனங்கள் பால் விற்பனையில் இறங்கிவிட்டன. அவை ஆவின் கூட்டுறவு நிறுவனம் செய்யும் பணியைச் செய்கின்றன. பதனப்படுத்தப்பட்ட பாலை பாக்கெட் போட்டு விற்கின்றன. இந்த நிறுவனங்கள் பால் மாடு உள்ளவர்களுக்குக் கடன் வழங்குவதுண்டு. தரமான குச்சித் தீவனமும் கடனில் வழங்குவார்கள். பால் மாடு வாங்க பணம் கொடுப்பார்கள். ஆனால், பாலை அரை விலைக்குத்தான் வாங்குகிறார்கள். அங்காடியில் சுத்தமான பசும்பால் (நீர் கலக்காதது) ஒரு லிட்டர் ரூ. 30 என்றால், கடன் கொடுத்த பால் நிறுவனம் ரூ. 15 கழித்துக்கொள்ளும்.

பாலை நல்ல விலைக்கு விற்றால்தானே மாடு உள்ளவர்களுக்கு லாபம் கிட்டும். பாலைப் பற்றி இப்படி எண்ணும்போது ஆபஸ்தம்பர் என்ற முனிவரின் கதை நினைவுக்கு வருகிறது. "வாழ்வு தருவது பசுக்களே' என்ற கொள்கையில் அவர் திடமாக இருந்தார். ஆபஸ்தம்பர் என்பது காரணப்பெயரே. ஆபஸ்தம்பர் நிறைய சூத்திரங்கள் (நன்னெறிகள்) எழுதியுள்ளார். "ஆப' என்றால் "தண்ணீர்' என்று பொருள். "ஸ்தம்பம்' என்றால் கம்பம் என்று பொருள். இவர் நர்மதை ஆற்றினுள் ஒரு கம்பத்தைப்போல் நின்ற வண்ணம் 12 ஆண்டுகள் தவம் இருந்த காரணத்தால் ஆபஸ்தம்பர் என்று அழைக்கப்பட்டார்.

இவ்வாறு 12 ஆண்டுகள் நர்மதையில் மூழ்கி மூச்சை அடக்கிக் கடுந்தவம் புரிந்த காலகட்டத்தில் நீர்வாழ் மீனினங்கள் எல்லாம் ஆபஸ்தம்பருடன் நேசமாகப் பழகின. மீனினப் பாதுகாவலராகவும் ஆபஸ்தம்பர் அறியப்பட்டார். ஆபஸ்தம்பரும் நீரின உயிர்களின் மீது நேசம் கொண்டார். ஒரு நாள் செம்படவர்கள் ஆபஸ்தம்பர் தவமிருந்த இடத்தில் பெரிய வலையை வீசினர். பின்னர் வலையை இழுத்துப் பார்த்தனர். சுமை அதிகமாக இருந்தது. ஏராளமாக மீன்கள் கிடைத்துவிட்டதாக எண்ணி முழு பலத்துடன் வலையை இழுத்துக் கரையில் போட்டபோதுதான் புரிந்தது. மீன்களுடன் ஆபஸ்தம்பரும் வலையில் மாட்டிக்கொண்டதைப் பார்த்து அவரை விடுவித்து ""சாமிகளே, எங்களை மன்னியுங்கள்...'' என்று கதறி ஆபஸ்தம்பர் காலில் மீனவர்கள் விழுந்து இந்தத் தவறுக்குப் பரிகாரம் செய்வதாக ஒப்புக்கொண்டனர்.

""நீங்கள் வலையில் பிடித்த அவ்வளவு மீன்களையும் பழையபடி ஆற்றில் விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்...'' என்று ஆபஸ்தம்பர் கூறவே, பயந்து நடுங்கிய மீனவர்கள் வலையில் பிடித்த மீன்களை ஆற்றில் விட்ட பிறகு ஆபஸ்தம்பரிடம் ""எங்கள் பிழைப்புக்கு என்ன செய்வது?'' என்று கேட்டார்கள். ""ஆற்றில் மீன் பிடிக்கக்கூடாது என்று நீங்கள் கூறினால் நாங்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்'' என்று மீனவர்கள் புலம்பவே, நர்மதை மன்னன் நபாகனிடம் இந்த சம்பவம் பற்றிய விவரம் சென்றடைந்தது. மன்னனிடம் ஆபஸ்தம்பர், ""எனது உயிரின் விலையை மதிப்பிட்டு மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கும். மீனவர்களின் வாழ்வுக்கு நான் எமனாக முடியாது'' என்றார்.

மன்னன் ஒரு லட்சம் தங்கக் காசுகள் தருவதாகக் கூறியதும், ""என் உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?'' என்றார். மன்னன் ஒரு கோடி தங்கக் காசுகள் தருவதாகக் கூறினான். ஆபஸ்தம்பர் ஒப்பவில்லை. அப்போது லோமாஷ் மகரிஷி அங்கு தோன்றி, மன்னனுக்கு உதவுவதாகக் கூறினார். உயிரின் விலையைப் பணம் ஈடுசெய்யாது என்பதால் மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் நல்ல கறவைப்பசுவை வழங்குவதாக சொல்லச் சொன்னார். அப்படிச் சொன்னவுடன் ஆபஸ்தம்பர் ஒப்புக்கொண்டார். என்ன, பொன்னைவிட பசுக்கள் உயர்ந்ததா என்று மன்னன் வியப்புற்றான். ஆபஸ்தம்பரின் கணக்குப்படி, அவருடைய உயிரின் விலை "வாழ்வு தரும் பசுக்களே' என்பது உறுதியானது. பொன்னோ, பணமோ அல்ல. பசுக்களே நீடித்த செல்வம் என்ற உண்மை இன்றும் பொருந்தக்கூடியது.

"உங்கள் பணம் உங்கள் கையில்' என்று ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் ரொக்கத்தால் வறுமையை ஒழிக்க முடியாது.

100 நாள் குளத்து வேலை என்ற ஏமாற்று வேலையால் வறுமையை ஒழிக்க முடியாது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் போட்டு இலவச அரிசி கொடுத்து வறுமையை ஒழிக்க முடியாது.

உழைக்காத மக்களுக்கு அரசு கஜானாவிலிருந்து எவ்வளவு பணம் இனாமாகக் கொடுத்தாலும் வறுமை ஒழியாது. மக்களின் வரிச்சுமைதான் ஏறும். விலைவாசி உயரும். பணவீக்கம் மேலும் மேலும் அதிகமாகும். ரூபாயின் மதிப்பு இறங்கும்.

மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மக்களை உழைக்க வைத்து அந்த உழைப்பின் மூலம் உற்பத்தியை உயர்த்துவதுதான் நாட்டின் செல்வம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவது தொழிலாளர்களுக்கு செல்வம்.

இந்த தத்துவத்தை வேதகால இந்தியர்கள் உணர்ந்துள்ளதை ஆபஸ்தம்பரின் கதை எடுத்துக்காட்டுகிறது. கறவை மாடு வளர்ப்பு, பால் பதனத் தொழில் நல்ல வழிகாட்டி. உணவு மானியத்திற்காக 10,000 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப் போகிறார்கள். அதில் ஒரு சதவீதம் செலவழித்து பசு, எருமை, ஆடு வழங்க மைய அரசு முன்வருமா? தமிழக முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் ஆடு, மாடு வழங்குவதாக அறிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு மேற்படி வாக்குறுதியை நிறைவேற்றி, நல்ல முன்னுதாரணத்தை எடுத்துக்காட்டியுள்ளார். மைய அரசு தமிழ்நாட்டு அரசின் முயற்சிக்குப் புத்தூக்கம் தரவேண்டும்.

வாழ்க பசுக்கள். வாழ்க பாரதம்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.