அறிவியல் ஆழமும் விரிவும் அழகும் - 2012

மத்தியக் கணக்குத் தணிக்கைக் குழு கண்டுபிடித்த அனைத்து "ஜி' விஷயங்களுக்கும் காந்திஜியின் 65-ஆம் ஆண்டு நினைவோடு அஞ்சலி செலுத்திவிட்டோம். ஏதாயினும்,  2012-ஆம் ஆண்டின்
Updated on
4 min read

மத்தியக் கணக்குத் தணிக்கைக் குழு கண்டுபிடித்த அனைத்து "ஜி' விஷயங்களுக்கும் காந்திஜியின் 65-ஆம் ஆண்டு நினைவோடு அஞ்சலி செலுத்திவிட்டோம். ஏதாயினும்,  2012-ஆம் ஆண்டின் அறிவியல் தொழில்நுட்ப நிகழ்வுகள் சிலவற்றை எண்ணிப் பார்ப்போமே.

 நாம் வாய் மொழிப் போராட்ட அகராதிகள் தயாரிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே இருக்கிறோம். ஆனால், மனிதனின் விதியை நிர்ணயிக்கும் உயிர் மொழிக் களஞ்சியம் சென்ற ஆண்டு வெளிவந்து ஆயிற்று. தேசிய மனித மரபணுவியல் ஆய்வு நிறுவனத்தின் "என்கோடு' ("என்சைக்ளோப்பீடியா ஆஃப் டி.என்.ஏ. எலிமென்ட்ஸ்') என்பது பெயர். இது ஒரு வகை "மனிதப் புத்தகம்'. மனித செல்களில்தான் வம்சாவளிக் குணங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

 டி.என்.ஏ. ஆகிய குரோமோசோம் கீற்று முறுக்கிய ஏணி மாதிரி. அதில் அடினின் - தைமின், குவானின் - சைட்டோசின் இணைகள் ஏணிப்படிகள். இந்த இணை வரிசையில்தான் குறுந்தகட்டுத் தகவல்கள் மாதிரி பாரம்பரியப் பண்புகள் பொதிந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மரபணு மொழிக் களஞ்சியம் வாழ்வியல், பரிணாம வளர்ச்சி, சுற்றுச் சூழலியல், உடலியல், மருந்தியல் எனப் பல்வேறு துறைப் புதிர்களுக்கு விடை அளிக்கும் என்று நம்பலாம்.

 இந்த வகையில் நோய்க் காரணிகளும் இதே மரபணுக்களில்தாம் குறிக்கப்பெற்று உள்ளன. இதனால் அந்த இணை மென்கார வாக்கியங்களின் மரபு எழுத்துகளைக் குறியீடு அகற்றி வாசித்தால் பல்வேறு நோய்களையும் இனம் காணலாம். சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் வாழைப் பழத்தின் 36,000 மரபணுக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. ஆரோக்கியமான வாழைப் பழங்களை உற்பத்தி செய்ய இது உதவலாம். ஆனாலும், மரபணு ரீதியில் மாற்றம் என்றால் நம் ஆர்வலர்கள் ஒத்துக் கொள்வார்களா தெரியாது?

 பழம் என்றதும், உணவுப் பழக்கம் பற்றிய கண்டுபிடிப்பையும் இங்கு குறிப்பிடலாம். எவ்வளவு தின்கிறாய் என்பதைவிட என்ன தின்கிறாய் என்பதுதான் வாழ்நாளை அதிகரிக்கும். இந்த உண்மைக்கு சென்ற ஆண்டு புது நிரூபணம் கண்டுபிடிக்கப்பட்டது.

 கலோரி மதிப்பு குறைவான உணவால் வாழ்நாள் கூடுகிறது. அமெரிக்காவில் தேசிய மூப்படைதல் நிறுவனத்திலும், விஸ்கான்சின் தேசிய ஆதிக் குரங்கு ஆய்வு மையத்திலும் நடைபெற்ற ஆய்வுகளும் தெரிவிக்கின்ற உண்மை இது. 28.5 சதவீதம் சர்க்கரை உணவு உண்ட குரங்குகளைவிட 3.9 சதவீத சர்க்கரை விழுங்கிய குரங்குகள் ஜம்மென்று வாழ்ந்தனவாமே.

 2012 நமது அண்டை உலகமான செவ்வாய் தேசத்திற்கு பொன்விழா ஆண்டு. 1962 நவம்பர் முதல் தேதி அன்று ஏவப்பட்ட ரஷிய "மார்ஸ்-1' விண்கலம்தான் செவ்வாய்த் தகவல்களை முதன்முறையாகப் பூமிக்கு அனுப்பியது. 1963 மார்ச் 21 அன்று புவித்தொடர்பு அறுந்து, இன்று சூரியனைச் சுற்றி வருகிறது.

 இன்றுவரை செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்ட 50 விண்கலன்களில் 2011 நவம்பர் 26 அன்று அமெரிக்கா செலுத்திய "கியூரியாசிட்டி' விண்கலம் பிரபலம். சென்ற ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று காலே குழிவுப் பள்ளத்தில் தரை இறங்கிற்று. அது எடுத்து அனுப்பிய 23,000 படங்களை ஆராய்ந்ததில் அங்கு குளோரின், கந்தகம், தண்ணீர் ஆகிய வேதிமங்கள் உள்ளன என்று தெரிகிறது. அதனால் ஆதி ஆரம்ப வாழ்நிலை உருவாகும் வாய்ப்புகள் உண்டு என்றும் கருதப்படுகிறது. செவ்வாய்க் கோளில் "மவுன்ட் ஷார்ப்' என்கிற கூர் மலையில் முன்னொரு காலத்தில் தண்ணீர் ஆறு ஒழுகியதோ என்றும் ஆராயப்பட்டு வருகின்றது.

 சூரிய மண்டலத்தில் செவ்வாய் மட்டுமா, புதனும் பிரதானம். "ஆதி(த்த)' பகவானுக்குப் பக்கத்தில் "முருகர்' மாதிரியான செல்லக் குழந்தை இந்த "மெர்க்குரி' கிரகம். (என்ன "முருகர்' மாதிரி ஒலிக்கிறதா?) தொன்மங்கள் கிடக்கட்டும்.

 2004 ஆகஸ்ட் 3 அன்று புதன் கிரகத்தை ஆராய்ந்திட அமெரிக்கா அனுப்பிய "தூது' விண்கலம் - "மெசஞ்சர்'. 2011 மார்ச் 18 அன்று புதனுக்கு 200 கிலோமீட்டர் அருகிலும், 15,193 கிலோமீட்டர் தொலைவிலும் ஆன நீள்வட்டச் சுற்றுப்பாதையைச் சென்று அடைந்தது. கடந்த ஆண்டு மார்ச் 17 அன்றோடு ஒரு லட்சம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியது. அதன் ஆய்வுப் பணி இந்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

 புதனின் சூரிய நோக்கு முகத்தில் 400 பாகை செல்சியஸ் வெப்பம். அங்கு காரீயம் உருகிப்போகும். சொன்னால் நம்ப மாட்டீர்கள், சூரியனே பார்க்காத அதன் துருவப் பள்ளங்களில் பனிக் கட்டிகள் நிறைந்து இருக்கிறதாம். சும்மா ஒரு கோப்பை அளவு அல்ல, 1,10,000 கோடி டன்கள். அத்தனையும் சென்னையின் மீது கொட்டினால் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு பனிக்கட்டி மூடிவிடும். அடேங்கப்பா.

 அவ்வாறே, சூரியனின் ஒன்பதாவது கோள் என்று கொஞ்ச காலம் பேசப்பட்டது புளூட்டோ கிரகம். அதன் "பி5' என்கிற ஐந்தாம் சந்திரன் 2012 ஜூலை 7 அன்று தற்செயலாகப் பதிவாகி இருக்கிறது. 2006 பிப்ரவரி 19 அன்று அமெரிக்க நாசா நிறுவனம் செலுத்திய "புது அடிவானம்' ("நியு ஹொரைசான்ஸ்') எனும் விண்கலம் புளூட்டோ கோளிற்கு 10,000 கிலோமீட்டர் அருகில் கடந்து சென்றபோது இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

 1978-க்கு முன்பு வரை சந்திரனே இல்லாமல் இருந்த புளூட்டோவுக்கு இன்று "காரான்', "நிக்ஸ்', "ஹைடிரா' இன்னும் பெயரிடப்படாத "பி4' ஆகிய 4 சந்திரன்கள் கண்டு துலக்கப்பட்டுவிட்டன.

 எப்படியோ, சூரிய மண்டலத்தின் உள்வட்டத்தில் புதன் தொடங்கி புளூட்டோ வரை புதிய தகவல்கள் இருக்கட்டும். சூரியனுக்கே பொங்கல் படைத்து உண்டால் போதுமா? வான்வெளி முதல் கடல் படுகை வரை சாகசங்கள் செய்ய வேண்டாமோ?

 அதுதான், 2012 அக்டோபர் 14 அன்று ஃபெலிக்ஸ் பௌம்கார்த்னர் என்கிற ஆஸ்திரிய விண்சறுக்கி வீரர் 39 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து ஹீலியம் பலூனில் குதித்து புதிய சாதனை படைத்தார். ஓசோன் படலத்தின் ஊடாக இரண்டரை மணிநேரப் பயணம். நியு மெக்சிகோ நகரின் தென்கிழக்கில் தரை இறங்கினார். மிகையொலி (சூப்பர்சானிக்) வேகம். அதிகபட்சம் மணிக்கு ஏறத்தாழ 1,343 கிலோமீட்டர். காற்றில் ஒலி பரவும் வேகம் கடல் மட்டத்தின் மேல் வெறும் 1,236 கிலோமீட்டர்தானே. அவர் பயன்படுத்திய ராட்சத பலூன் 8,50,000 கன மீட்டர்கள் பருமன். பலூன் 0.02 மில்லிமீட்டர் தடிமன் பாலி எத்திலீன் படலத்தால் ஆனது.

 உச்சிவானில் இருந்து அன்னப் பறவையாய் ஒருவர் தரை இறங்கினார் என்றால் இன்னொருவர் வராக அல்லது மச்ச அவதாரமாய் கடலுக்கு அடியில் 11 கிலோமீட்டர் இறங்கித் திரும்பினார். ஜேம்ஸ் காமரோன் தான் இந்த துணிச்சல் வீரர். ஓர் உண்மையைச் சொல்லவா? டைட்டானிக், டெர்மினேட்டர், அவதார் போன்ற பிரபலத் திரைப்படங்கள் தயாரித்தவர் இவரே.

 பசிபிக் கடலின் மரியானா பெரும் பள்ளத்தில் இமய மலையையே முக்கி உட்கார வைத்துவிடலாம். அத்தனை ஆழம். அதற்கென "ஆழ்கடல் சவால்' ("டீப்சீ சாலஞ்சர்') என்னும் நீர்மூழ்கிக் கப்பலும் தாமே தயாரித்தார் என்றால் கோடம்பாக்கம் மட்டுமா, உலகமே அதிசயிக்கும். 7.3 மீட்டர் நீளம். 109 சென்டிமீட்டர் அகலம். கண்ணாடி நுண் இழைகளும், ஈப்பாக்சி பிசினும் கலந்து தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல். எடை குறைந்தது. வலு மிக்கது.

 மூச்சுக் காற்றின் ஈரப் பதத்தையும், உடல் வியர்வையையும் பிரித்துச் சேமித்திட உபகரணங்களும் அந்தக் கப்பலுக்குள் இருந்தன. தண்ணீருக்குள் பயணம் என்றாலும் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் வேண்டாமா? அதற்குத்தான் இந்த ஏற்பாடுகள். நாமும் இனி இதே தொழில்நுட்பத்தைக் கற்று அவரவர் பயன் பெறவேண்டி வருமோ என்னவோ?

 அணு தொடங்கி அண்டம் வரை எத்தனையோ புதிய துறைகளில் கண்டுபிடிப்புகள் நடந்தேறி உள்ளன. கடந்த நவம்பரில் ஜெர்மனியில் ஹெய்டல்பர்க், மாக்ஸ் பிளாங்க் வானவியல் நிறுவனத்தில் ரெம்கோ வான் டென் போஷ் தலைமையிலான வானவியல் குழுவினரின் கண்டுபிடிப்பு முக்கியம் ஆனது.

 பெர்சியஸ் என்ற உடுக்கணத்தின் அருகில் 25 கோடி ஒளியாண்டுத் தொலைவில் என்.ஜி.சி 1277 எனும் உடுமண்டலம் உள்ளத்தில் பிரமாண்ட கருந்துளை விண்மீன் ஒளிந்து இருக்கிறதாம். நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பாயும் ஒளி ஓராண்டில் பயணிக்கும் தொலைவே ஓர் ஒளி ஆண்டு என்க.

 அந்தக் கருந்துளை விண்மீன் சூரியனைப்போல 1,700 கோடி கனமானது என்றால் தலைசுற்றத்தான் செய்யும். அதிவேக ஒளியைக்கூட வெளியே விடாத அதீத ஈர்ப்பு மிக்க விண்மீன். அதன் உள்ளே ஒளிப்பிரவாகம். என்றாலும் ஒளி, வெளியே வராததால் இருட்டாகத்தானே தெரியும். அதுதானே கருந்துளை விண்மீன். டெக்சாஸ், ஹாபி - எபர்லி தொலைகாட்டியும், விண்சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலைகாட்டியும் பதிவு செய்த பிம்பங்களின் அடிப்படையிலான கண்டுபிடிப்பு இது.

 அண்டவெளி ஆச்சரியங்களைப் போலவே ஆய்வுக் கூடத்திலும் கருந்துளைப் பரிசோதனைகள் நடந்ததும் சென்ற ஆண்டுதான். 2012 ஜூலை 4 அன்று "கடவுள் துகள்' ("ஹிக்ஸ்-போசோன் துகள்') கண்டு அறியப்பட்டது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தின் பரிசோதனை அது. விஞ்ஞானிகள் அங்கு புரோட்டான்களைப் படைத்தனர். அவை உருவம் அற்றவை. வெறுமை உற்றவை. அந்தப் "பெரும் ஹேட்ரான் மோது கருவி'யின் உள்ளகத்தே கோடிக்கணக்கிலான கருந்துளைகள் பரவின. கடவுள் துகள்கள் அங்கு அசைவாடிக் கொண்டு இருந்தன.

 அப்பொழுது விஞ்ஞானிகள் "ஒளி உண்டாகுக' என்று உரைத்தனர். உரைக்கவே ஒளி உண்டாயிற்று. இத்தகைய இம்மிகள் இயற்கையில் தென்படும் பல்வேறு ஆற்றல் மூலங்களை இனம் காட்டும் என்பதே பிரபஞ்ச ரகசியம்.

 சத்யேந்திரநாத் போஸ் என்னும் இந்திய விஞ்ஞானியின் பெயரிலான இந்தக் கண்டுபிடிப்பில் நம் நாட்டில் 17 அறிவியல் நிறுவனங்கள் பங்களித்தன என்றால் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

 மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான ராஜா ராமண்ணா மையம் (இந்தூர்), இயற்பியல் நிறுவனம் (புவனேஷ்வரம்), இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (மும்பை), கொல்கத்தாவில் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம், போஸ் நிறுவனம், மாறுபடு ஆற்றல் சைக்ளோட்ரான் மையம் ஆகியவை மட்டும் இல்லை. பஞ்சாப், குவாஹாட்டி, ராஜஸ்தான் பல்கலைக்கழகங்களும் இந்தக் கடவுள் துகள் ஆய்வுக்கான எத்தனையோ காந்தங்களையும், மின்துலக்கிகளையும், மென்பொருள்களையும் வழங்கின.

 இந்திய வரலாற்றில் முதன்முறையாக நடந்து முடிந்து ஒரு வருடமே ஆன புத்தம் புதிய அறிவியல் தகவல்களை இனியேனும் தலைப்புச் செய்திகள் ஆக்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com