சென்னை, டால்மியாபுரம் இவைகளை மையமாகக் கொண்ட போராட்டங்கள் மீது போலீஸாரின் கடுமையான அடக்குமுறை தாண்டவமாடியது. அத்துடன், தமிழ்நாடெங்கும் ஆங்காங்கு ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தோழர்கள் தடியடி தர்பாருக்கு ஆளான செய்திகள் வந்தபடி இருந்தன. இரவு பகலாக "நம் நாடு' அச்சகத்திலேயே நான் தங்கிவிட்டேன், வரும் விவரங்களுக்குப் பதில் தரவும், செய்திகளை வரிசைப்படுத்தி வெளியிடவும். சென்னை மத்திய சிறைச்சாலையில் அண்ணாவிடம் நாள்தோறும் சென்று விவரங்களைச் சொல்லி, மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனை பெறுவதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது.