கடந்த 6, 7 மாதங்களாக போதிய மழை இல்லாமல் காய்கறி விலைகள் உயர்ந்துவிட்டது. நகரங்களில் உள்ளவர்கள் என்னைப் பின்பற்றி உங்கள் மொட்டைமாடியை ஒரு அழகான காய்கறித்தோட்டமாக மாற்றலாமே. தக்காளி, வெங்காயம், கத்திரி, வெண்டை, கறித்தட்டாம்பயறு, கீரை வகைகள், அகத்தி, முருங்கை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெந்தயக்கீரை என்று பயிரிட்டால் உடல் நலத்தைப் பேணலாம். வேண்டுவதெல்லாம் பூந்தொட்டி சிமெண்டு பைப், உடைந்த ஓட்டை பிளாஸ்டிக் டப், தோட்டத்து மண், விதைகள் அல்லது நாற்றுகள். பஞ்சகவ்யத்தின் மூலம் நல்ல விளைச்சல் எடுக்கலாம். நகரத்திற்கு ஏற்ற ஃபார்முலாவில் பசும்பால் கிடைக்காவிட்டால் 500 மில்லி பாக்கெட் பால், 200 மில்லி கெட்டிமோர், 10 வாழைப்பழத்தில் சற்று சர்க்கரையிட்டுப் பிசைந்த துவையல், 1 கிலோ சாணி, 50 மில்லி நெய், 200 கிராம் உளுந்து மாவு எல்லாவற்றையும் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 வாரம் ஊறப் போட்டு தினமும் குச்சியால் கலக்கிவிட்டுப் பயன்படுத்தும்போது 10 லிட்டர் தண்ணீரில் 25 மில்லி கலந்து பயிருக்கு ஊற்றிப் பாருங்கள். நல்ல விளைச்சலை மொட்டை மாடியில் பெறலாம். மாலை நேரம் சிறிது டி.வி. பெட்டிக்கு ஓய்வு வழங்கி, பயிர்களுக்கு நீர் விட்டுப் பாருங்கள். இதயம் வலிக்காது. சத்தான காய்கறி உற்பத்தி செய்து உண்ணலாமே!